5- சாவி பற்றி சுஜாதா…


குங்குமத்திலும் அவர் அதிக நாள் நிலைக்கவில்லை. தனக்கென்றே பத்திரிகை துவங்க எண்ணி ‘சாவி‘ இதழைத் துவங்கினார். அதன் முதல் பிரதிகள் கல்கண்டு போல குறைந்த விலைக் காகிதத்தில் வந்தன.
அந்த முதல் இதழிலேயே என்னை தொடர் கதை துவங்கச் சொன்னார். (‘நில்லுங்கள் ராஜாவே‘) குங்குமம் பத்திரிகையில் இருக்கும்போதே பல புதுமைகள் செய்தார். பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு இருவரையும் ஒரு இதழ் தயாரிக்க வைத்தார். அதில் நான் குழந்தைகள் ஆண்டு என்கிற கவிதை எழுதினேன். அது இன்னமும் சிலர் ஞாபகத்தில் இருக்கிறது. மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
அதே வழக்கத்தைத் தொடர்ந்த சாவி, என்னை ஒரு சாவி இதழுக்கு ஆசிரியராக மாறும்படி பணித்தார். “உன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்” என்று சொன்னார் சாவி. இதழில் வழக்கம்போல் அழகான பெண்ணின் படத்தை அட்டைப் படத்தில் போடாமல் மணியம் செல்வனை ஒரு குழந்தையின் படத்தை வரையச் செய்தேன். அதற்கு நஷ்டஈடாக நடுப்பக்கத்தில் ப்ளேபாயிலிருந்து ஒரு படம் எடுத்துப் போட்டேன். சாவி அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த இதழில் புத்தக விமர்சனம், அறிவியல் கட்டுரை, கலாப்ரியாவின் கவிதை எல்லாம் இருந்தது. ஆனால் தப்பான காரணத்துக்காக, அது வந்த முதல் நாள் காலையிலேயே விற்றுத் தீர்த்தது.
பின்னர் நான் குமுதம் ஆசிரியராக பணி ஏற்றபோது அந்த ஒருவாரப் பயிற்சி எனக்கு மிகவும் பயன்பட்டது. அப்போதே தமிழர்கள் கடி ஜோக்குகளிலும் ஹைக்கூ கவிதைகளிலும் தேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. சாவி மாத நாவல் வெளியிட்டார். ‘அப்ஸரா‘ என்கிற நாவல் எழுதிக் கொடுத்தேன். புத்தகங்கள் வெளியிட்டார். நிர்வாண நகரம் முதலில் சாவியின் மோனா பப்ளிகேஷன்சில் வெளியானது.

–அடுத்த பதிவு இதன் நிறைவுப் பகுதி…
Advertisement



No trackbacks yet.