8- சுஜாதாவின் “ஸ்ரீரங்கம்”

இதன் முந்தைய பகுதி….

கோபுரத்திலிருந்து தெற்கு வாசலில் நடந்து செல்கையில் வெற்றுக்கு ஒரு நாலு கால் மண்டபம் இருக்கும். இதைக் கடந்தவுடன் வலது பக்கம் சாத்தார வீதி. இடது பக்கம் தெற்கு அடையவளைஞ்சான். ஸ்ரீரங்கத்தில் அத்தனை வருஷங்கள் இருந்திருக்கிறேன். தெற்கு அடையவளைஞ்சான் தெருவுக்கு ஒரே ஒரு முறை தான் போயிருக்கிறேன். சித்திரை வீதிக்காரர்கள் மற்ற வீதிகளுக்கு லேசில் போக மாட்டோம். சாத்தார வீதி அப்படியில்லை. அது கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். பூ விற்பார்கள். ஸ்ரீ ஜெயந்திக்குச் சப்பரம் கட்டுவதற்கு இங்கு தான் வருவோம். சுவாமிக்குப் பூப் பல்லக்கு இங்குதான் செய்வார்கள். பெட்ராமாக்ஸ், வாழை மரம், சித்திரத்தை போன்ற நாட்டு மருந்துகள் எல்லாம் இங்கேதான் கிடைக்கும். சாத்தார வீதி மூலையில் தான் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்றவர்கள் எல்லாம் பேசுவார்கள். லவுட்ஸ்பீக்கர் வைத்து சப்தத்தை தெற்கு வாசல் வரை கொண்டு விடுவார்கள்! மூலையில் நின்று கொண்டு கேட்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருப்போம். பெரியார் ஸ்ரீ ரங்கநாதரிடம் ரொம்ப எக்கச்சக்கமான கேள்விகள் எல்லாம் கேட்பார். ‘உறையூருக்கு எதற்குப் போறே நீ ? வாலியை ஏண்டா மறைஞ்சு கொன்னே நீ ?‘ என்றெல்லாம்! பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி’ என்பார். அந்தக் கூட்டங்களில் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு தலைமை தாங்கிய கருப்பண்ணக் கோனார் தான் எங்கள் தெருவில் பால் டிப்போ வைத்திருந்தார். எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப சிநேகிதர். பார்ப்பனரை வெறுக்கிறதையும் பால் வியாபாரத்தையும் அவர் கலக்கவே மாட்டார்.


சாத்தாரத் தெரு முனையிலிருந்து சற்று முன்னே போனால், கடைத் தெருவில் ஜவ்வாது, புனுகு, சந்தனம் எல்லாம் விற்பார்கள். கடைக்காரனின் சீட்டுக்கு அடியில் ஒரு கூண்டு வைத்து புனுகுப் பூனை சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருக்கும். நான் பார்த்த முதல் ‘ரோபாட்‘ இந்தக் கடையில் கையில் வாசனாதி திரவியங்களை வைத்துக் கொண்டு தலையைச் சதா லேசாக ஆட்டிக் கொண்டிருந்த நாமம் போட்ட, விளம்பரச் செட்டியார் பொம்மை.

அந்தக் கடைக்கு அருகில், எதிரில் மண்டபத்து தூணருகில் தரை மட்டத்துக்கு இரண்டடி கீழே முகம் முழுவதும் வெண்ணை அணிந்து கொண்டு அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குக் காத்திருக்கும் பாதாள கிருஷ்ணன் சந்நிதியின் முன் நடக்கும் உறியடி உற்சவம், எங்கள் கீழ் வாசல் உறியடியைப் போல அத்தனை விஸ்தாரமாக இருக்காது. முதுகு பூரா நாமம் போட்டுக் கொண்டு ஓர் ஆள் வந்து அலங்கார ஜடை மூலமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் குட்டிக் குட்டித் தயிர்ச் சட்டிகள் வைத்த ஃபிரேமை, ஒரே வீசு வீசி, உடைப்பதைப் பெருமாள் பார்த்திருந்து விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய் விடுவார்.     

Advertisement
    • R. Jagannathan
    • October 11th, 2011

    நானும் ஸ்ரீரங்கத்தான் தான்! ஆனால் இந்தமாதிரி கூட (தப்பாக நினைக்காதீர்கள், இந்த பகுதியில் ’சுஜாதா’ ரொம்ப தென்படவில்லை!) எழுதத் தெரியாதவன்! – ஜெ.

    • அன்புள்ள ஜெ,

      இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது ? நீங்கள் கூறுவது உண்மை தான். நமது வழக்கமான சுஜாதாவை இந்தத் கட்டுரையில் (ராய கோபுரம்) காணவில்லை தான். ஆனால் சிறிது பொறுங்கள். தான் ஸ்ரீரங்கத்தில் சந்தித்த ஒரு திருடனை மீண்டும் முற்றிலும் வேறொரு சூழ்நிலையில் கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சைன்டிஸ்ட்டாக சந்திக்க நேர்ந்த அனுபவத்தை நம்முடன் சுவையாக இந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்…

  1. அன்புள்ள ஸ்ரீநிவாஸ்

    தேவன் புத்தக வெளியீடு என்று நினைவு.அது தொடர்பான கட்டுரை ஒன்றில் பா.ரா (அப்போது அவர் கல்கியில் பணியிலிருந்தார் என நினக்கிறேன்)அவர்கள் சுஜாதாவின் நகைச்சுவை பற்றி எழுதியிருந்ததை இத்தளத்தில் படித்ததாக நினைவு. மீண்டும் அக்கட்டுரையை தேடியபோது கிடைக்கவில்லை! உதவி

  2. அன்புள்ள சதீஷ்,

    நீங்கள் குறிப்பிடும் பதிவு இதுவா ?

    நகைச்சுவை எழுதுவது எப்படி ? — சுஜாதா

    • Exactly !!! Thank you very much srinivas !! Belive me whenever I read
      articles from Paa.Raa or Sujatha my stress goes away !! Again thank you very much :-)

  3. இதில் சுஜாதா தென்படவில்லை என்று கூற முடியாது. பிற்காலங்களில் குறிப்பாக 1993ல் அவர் ஓய்வு பெற்றபின் அவர் எழுதிய பாணி வெகுவாக மாறியிருந்தது. அது பற்றிய விமர்சனங்களை அவரே சந்தித்திருக்கிறார். ஒப்புக் கொண்டதில்லை. வாசகனின் வயது மாற்றம் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் ஓய்வு பெற்றபின் எழுதியவற்றில் ஆரம்ப காலத்தை விட கிம்மிக்ஸ் (வார்த்தை சாகசங்கள்) குறைவு. எளிமையாக நேருக்கு நேர் உரையாடுவது போன்ற plain நடையைப் புழங்க ஆரம்பித்தார். கருத்துக்களிலும் ஆழமான தத்துவப் பார்வை அவரது எழுத்தில் கலந்து விட்டது. எழுத்தாளனாக மட்டுமின்றித் தனி மனிதன் என்ற முறையிலும் வேறொரு தளத்துக்குப் போக அவர் செய்த முயற்சிகளின் விளைவாக இருக்கலாம். ஆனால் சாகசமோ தத்துவமோ எப்படி எழுதினாலும் சுஜாதா சுஜாதாதான். (என்னைப் பொறுத்த வரை அவர் தனது வீட்டு மளிகை லிஸ்டை வெளியிட்டாலும் ரசிக்கிற அளவு ரசிகை தான்)

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 78 other followers