9- கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்

ரு குடும்பத்தின் மிகப் பெரிய சொத்து எது தெரியுமா? காசு- பணமோ, வீடு- வாசலோ, நகை நட்டுகளோ, வண்டி- வாகனங்களோ… எதுவுமில்லை. மிகப் பெரிய சொத்து, குழந்தைகள்தான்; வாரிசுகள்தான்!

ஒரு குழந்தை இந்த உலகில் ஜனித்திருக்கிறது; அதாவது, தாய்க்குப் பிரசவ வலி அதிகமெடுத்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், உடனே அந்தக் குழந்தையின் தகப்பன் என்ன செய்வான்? நாமெல்லாம் என்ன செய்தோம்? விறுவிறுவென ஓடிப் போய், குழந்தையைப் பார்ப்போம்; பரவசமாவோம். ஊருக்கும் உறவுக்கும் போன் போட்டுத் தகவல்கள் சொல்வோம். எதிர்ப்படுகிற தெரிந்தவர் அறிந்தவர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்வோம். அது கல்கண்டாகவும் இருக்கலாம்; சாக்லெட்டாகவும் இருக்கலாம்; மைசூர்பாகும் தரலாம்! ஏனெனில், குழந்தை என்பது குதூகலம் சம்பந்தப்பட்டது; சந்தோஷத்துக்கு உரியது; இனிமையானதொரு உறவு!

ஆனால், குழந்தை பிறந்ததும், சுற்றியுள்ளவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் சின்ன கல்கண்டு கொடுத்துக்கூட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளாதவர் யார் தெரியுமா? வசுதேவர்தான்! பாவம் அவர். சந்தோஷம் மொத்தத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டார்.

அதுமட்டுமா? இன்னொரு விஷயம். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசத்தையும் இங்கே பார்க்கவேண்டும். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமர்; ஒரு பகல் பொழுதில், அரண் மனையில், விளக்குகள் அணி திரண்டு ஒளியைத் தந்துகொண்டிருக்க… ஸ்ரீராமர் அவதரித்தார். இங்கே… சந்திர குலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்ண பிரான். இருள் கவிந்திருக்கும் இரவு வேளையில், இருட்டு சூழ்ந்திருக்கிற சிறைச்சாலையில் பிறந்தார் ஸ்ரீகண்ணன்.

சரி… இத்தனை இருட்டுக்கு நடுவில், குழந்தையை எப்படிப் பார்த்தாராம் வசுதேவர்? கண்ணனின் 32 பற்களும், சந்திரனுக்கு நிகராக ஜொலித்தனவாம்! அந்த ஜொலிப்பின் வெளிச்சத்தில், குழந்தையின் திருமுகத்தைப் பார்த்து ரசித்தார் வசுதேவர்.

என்னடா இது… பிறந்ததுமே பல் முளைத்துவிட்டதா என்ன என்று வியக்கிறீர்கள்தானே? பற்கள் மட்டுமில்லை; நான்கு தோள்களும் சங்கு- சக்கரமும் திகழப் பிறந்தவன், அவன்! அதைப் பார்த்துப் பதறிவிட்டனர், வசுதேவரும் தேவகியும்! பின்னே… நான்கு தோள்கள்; நான்கு திருக்கரங்கள் எனக் குழந்தை பிறந்திருக் கிறான் என்கிற விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால், அலறிப் பதறிக்கொண்டு, குழந்தையை அழிக்க ஓடிவந்து விடுவானே எனப் பயந்தனர். பிறகு, அவர்களின் வேண்டுகோளின்படி, அந்தப் பராபரன், நம்மைப் போல இரண்டு தோள்களுடன், இரண்டு கைகளுடன் காட்சி தந்தான்.

இன்னொரு சுவாரஸ்யம்… குழந்தை பிறந்ததும், அந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுடன் மட்டுமின்றி, அந்தணர்களுக்குத் தானம் அளித்தும் குதூகலிப்பார்கள், அல்லவா?

தனக்கு ஸ்ரீகண்ணன் பிறந்ததும், ‘ஆயிரமாயிரம் அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு ஆயிரமாயிரம் பசுக்களையும், அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஆயிரமாயிரம் தங்கப் பூண்களையும் (தங்கப் பூணூல்), போர்த்திக்கொள்வதற்கு ஆயிரமாயிரம் ரத்தினக் கம்பளங் களையும், ஆயிரமாயிரம் தங்கத் தட்டுகளையும், அந்தத் தட்டுகளில் ஆயிரமாயிரம் பொற்காசுகளையும் வழங்கு கிறேன்’ என்றாராம் வசுதேவர்.

சுக்கிராச்சார்யருக்குக் குழப்பம். ‘சிறைச்சாலைக்குள் இருக்கிற வசுதேவர், அத்தனை அந்தணர்களையும் எப்படி, எங்கே அழைப்பார்? அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்கிற பசுக்களை எங்கிருந்து பிடித்து வருவார்?’ என்று தவிப்பு!

ஆனால், வசுதேவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘ஒன்றைக்கூட கொடுக்க முடியாதபடிக்கு, சிறையில் இருக்கிறேன்தான்! ஆனாலும் மனதார, வாயாரச் சொல்லி மகிழலாமே என்பதால்தான் இப்படிச் சொன்னேன்’ என்கிறார். ‘சரி… ஒன்றோ இரண்டோ, ஒருவருக்கோ இரண்டு பேருக்கோ தருவதாகச் சொல்லிக் கொள்ளவேண்டியதுதானே?’ என்று கேட்டதற்கு, ‘கொடுக்கவே முடியாது என்று இருக்கிற நிலையில், ஒன்று என்று சொன்னால் என்ன… ஆயிரம் என்று தாராளமாகத்தான் சொன்னால் என்ன?’ என்று சொல்லிப் பூரிக்கிறார் வசுதேவர்.

பகவானுக்கு உள்ள திருநாமங்களில் வாசுதேவன் எனும் நாமமும் ஒன்று. வாசுதேவன் என்றால்… எங்கும், எப்போதும் வசிக்கிறவன் என்று அர்த்தமாம்! ஆனால், இங்கே வசுதேவனின் மைந்தன் வாசுதேவன் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது! அதுதான் வசுதேவருக்கு தரப்பட்டிருக்கிற மரியாதை. நந்தகோபனுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அவருக்கு தந்தைக்கு உரிய மரியாதையும் சந்தோஷமும் எப்படியெல்லாம் கிடைத்தது தெரியுமா?

குழந்தையில் அழகு, அழகில்லாதது என்கிற வித்தியாசங்கள் கிடையாது. குழந்தை என்றாலே அழகுதான்! அதிலும் குழந்தை கொழுகொழுவென்று இருந்தால், கொள்ளை அழகு. பகவான் ஸ்ரீகண்ணன் சிறுவயதில், குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தான் தெரியுமா? இளங்களிறு போல இருந்தானாம்! அதாவது, குட்டி யானையைப் போல் மிடுக்குடன் திகழ்ந்தான். வெண்ணெய், பால், தயிர் என்று சாப்பிட்டுச் சாப்பிட்டு வளர்ந்தவன் அல்லவா, அவன்?!

இன்றைக்கு மருத்துவர்கள் சொல்கிற அட்வைஸ், ‘ஒயிட்டா இருக்கிற உணவை கட் பண்ணுங்க’ என்பதுதான்! அதாவது பால், தயிர், வெண்ணெய், சாதம் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். நம்மில் பலரும், ‘வெண்ணெய், தயிர், பால்’ என்றெல்லாம் ஒரு பேப்பரில் எழுதி, வீட்டில் வைத்திருந்தால்கூட, உபத்திரவம் வந்துவிடும் எனப் பயப்படுகின்றனர். ஆனால், பகவானுக்கு இந்தப் பிரிவினைகள் ஏதுமில்லை. குடித்ததே தயிர், கண்டதே பால், உண்டதே வெண்ணெய் என வளர்ந்தவன், கண்ணபிரான்! அவன், குட்டி யானையாக வலம் வரத்தான் செய்வான்.

குமரனாக நந்தகோபனிடமும், இளம் சிங்கமாக யசோதையிடமும் வளர்ந்தான் கண்ணன் என்கிறாள் ‘மார்கழித் திங்கள்’ பாடிய ஸ்ரீஆண்டாள். அதாவது, நந்தகோபனைக் கண்டால் பவ்யமாக இருப்பான் கண்ணன். அதுவே, தாயார் யசோதையிடம் சண்டித்தனம் செய்து, ஏகத்துக்கும் சேட்டைகள் செய்வான் அவன்.

பிறந்ததுமே யமுனையைக் கடந்து, அக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அல்லவா, கண்ணன்? அப்படிக் கண்ணன் அங்கே போனதும் ஊரே கூடியதாம்; குதூகலித்ததாம். ‘நான்தான் முதல்ல பாப்பேன்; நான்தான் முதல்ல பாப்பேன்’ என்று நந்தகோபன் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே நின்றது. இதைக் கண்டு கிடுகிடுத்துப் போனாளாம் யசோதை. ‘இங்கே பஞ்ச லட்சம் பெண்கள் இருக்கிறார்களே… அவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்; தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்கிறார்கள்; மடியில் கிடத்தி மகிழ வேண்டும் என்கிறார்கள். அத்தனை லட்சம் பெண்களும், குழந்தையை மடியில் கிடத்தி மகிழ்வதற்கு, என்ன செய்வது?’ என கைபிசைந்து தவித்தாள்.

கடைசியாக… வீட்டு வாசலில், ‘முதலில் இவள், அடுத்தது அவள், மூன்றாவது இவள், நான்காவது, ஐந்தாவது…’ என்று மிகப் பெரிய பட்டியல் போட்டு, அதன்படி சட்சட்டென்று அவர்கள் குழந்தையை வாங்கி, மடியில் போட்டுக் கொஞ்சிவிட்டு, அடுத்தவரிடம் கொடுத்துவிட… அவர்கள் கொஞ்சிக் குதூகலித்து அடுத்தவரிடம் குழந்தையைத் தர… என்று அந்த ஊரே கொஞ்சி மகிழ்ந்ததாம்!

இவை அனைத்தையும் பார்க்கின்ற பேறு, பாக்கியம் எல்லாம் நந்தகோபனுக்குத்தான் கிடைத்தது. அதிலும் குறிப்பாக, மடியில் கண்ணனைக் கிடத்தி, அவனது கன்னத்தை வருடியபடியே பெண்ணொருத்தி, ‘உங்க அப்பா யாருப்பா?’ என்று கேட்டாள்.

குழந்தைக்கு பேச்சு வருகிறதோ இல்லியோ, அப்படியே வராவிட்டால் கூட, அது ஏதோ சொல்ல… ‘அட… குழந்தை அப்பான்னு கூப்பிடறதே… தாத்தாங்கறதே… அத்தையைக் கூப்பிடறது’ என்றெல்லாம் சொல்லிக் குதூகலிக்கிறவர்கள் தானே, நாம்?!

அந்தப் பெண்மணி கேட்டதும், வசுதேவர் என்று தந்தையின் பெயரைச் சொல்ல… கண்ணபிரான் சட்டென்று ‘வ’ என்று சொல்லிவிட்டு உடனே நிறுத்திக்கொண்டார். ‘இப்போதுதான் பிறந்திருக்கிறோம்; இன்னும் பாடசாலைக்கே போகவில்லை; பேச்சே வரவில்லை. அப்படியிருக்க… இதற்கு எப்படி பதில் சொல்வது!’ என்று யோசித்த கண்ணன், தாமரை இதழ்கள் போன்ற தன் விரலை மெள்ள நீட்டி, தன்னுடைய கடைக்கண்ணால், ஓரக்கண்ணால் நந்தகோபனைப் பார்க்க… ‘அட… அப்பா யாருன்னு காட்டிருச்சே குழந்தை’ என்று ஒருத்தி சொல்ல… உடனே இன்னொருத்தி, ‘குழந்தை அவங்க அப்பாவைப் போலவே, அவர் ஜாடையிலேயே இருக்கு’ என்று சொல்ல… களுக்கென்று சிரித்துக்கொண்டாராம் ஸ்ரீகிருஷ்ணர். அங்கிருந்தவர்கள் அனைவரும், குழந்தையின் சிரிப்பைக் கண்டு பூரித்துப் போனார்களாம்!

ஆக, அத்தனை சந்தோஷங்களையும் பெருமைகளையும் நந்தகோபனுக்குக் கொடுத்தாலும், வசுதேவரைப் போற்றத் தவறவில்லை ஸ்ரீகண்ணனின் அடியவர்கள். அதனால்தான் வசுதேவனின் மைந்தனுக்கு வாசுதேவன் என்கிற திருநாமமே அமைந்தது.

வாசுதேவன் என்று சொன்னால், அந்தக் கண்ணன் மகிழ்வான். குளிர்ந்த மனத்துடன், நாம் கேட்பவற்றையெல்லாம் வாரி வழங்குவான். ‘உங்க அப்பா அவர்தானே…?’ என்று ஒருவர் சொல்லும்போது, மகனுக்கு பெருமிதம் பிடிபடாது என்பது அந்த பகவானுக்கும் பொருந்தும்.

வாசுதேவா, வாசுதேவா, வாசுதேவா… என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருங்கள். குழந்தைக் கண்ணன், குதூகலத்தில் மகிழட்டுமே!

- இன்னும் கேட்போம்…

–நன்றி சக்தி விகடன்

இதன் முந்தைய பகுதிகள்:

Advertisement
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 79 other followers