8- கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்


ன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைமுறை. ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்று சொல்லியிருப்பதுபோல், குழந்தைகள் உற்சாகத்துடன் ஓடி ஆடி விளையாட வேண்டும். அப்படி விளையாடினால்தான் தேகம் ஆரோக்கியமாகத் திகழும். உடலுக்கு ஆரோக்கியம் தருவது விளையாட்டு எனில், ஆத்மாவுக்கு ஆரோக்கியம் தருவது எது? பகவத் விஷயங்களை அவர்களுக்குச் சொல்லித் தருவதைத் தவிர வேறென்ன இருக்கிறது, சொல்லுங்கள்!

பகவத் கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்கிறபோது, ஒரே திருநாமம் இரண்டு இடங்களில், அதுவும் அடுத்தடுத்து வருவதாகச் சொன்னேன். அந்தத் திருநாமம்… வசுப்ரதஹா.

இங்கே, வசு என்றால் ஐஸ்வரியம் என்று அர்த்தம்; சொத்துக்கள் என்று அர்த்தம். ப்ரதஹா என்றால் ப்ரதாதி; அதாவது, சொத்துக்களையும் ஐஸ்வரியங்களையும் நிதியாக அளித்தவன் என்று பொருள்.

என்ன சொத்து? என்ன நிதி?

இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு ஈடு இணையற்ற மிகப் பெரிய சொத்து என்பது அவர்களின் வாரிசுதானே?! பூவுலகில், தேவகியை மாதாவாகவும் வசுதேவரைப் பிதாவாகவும் வரித்துக்கொண்டு ஜனித்தானே கண்ணபிரான்… அதைவிட வேறென்ன ஐஸ்வரியத்தை அவர்களுக்கு வழங்க முடியும்? ‘புத்திரன்’ என்கிற நிதியைத் தந்தவன் என்பதற்காக ‘வசுப்ரதஹா’ எனும் திருநாமம் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குக் கிடைத்தது.

எனக்கொரு புத்திர பாக்கியத்தைக் கொடு’ என்று வேண்டித் தவம் இருக்கின்றனர் பூவுலகில் பலர். ஆனால், ஜகத்துக்கே பிதாவாகத் திகழும் கண்ணபிரான், தேவகிக்கு மாதா என்கிற பட்டத்தையும், வசுதேவருக்கு பிதா எனும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்த கருணையைக் கவனியுங்கள்.

இங்கே ஒரு விஷயம்…

கங்கைக் கரையில், ராம லட்சுமணர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னே… அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! சுகுமாரர்கள் அல்லவா! சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் நிறைவாகவும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வந்தவர், விஸ்வாமித்திரர். அவர் அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார். நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்! ம்ஹூம்… இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

சரி… அவர் எப்படி அவர்களை எழுப்பினார் தெரியுமா? ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம்.

பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா சுப்ரஜா’ என்று ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்? என்ன அர்த்தம் இதற்கு?

அதாவது, ‘இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ…’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மறைமுகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

இந்த உலகின் சுவாரஸ்யங்களில், மிக முக்கியமானது இதுதான்! தாயும் தகப்பனுமாகக் கைகோத்து, ஒருவனைப் படிக்க வைத்து, ஆளாக்கியிருந்தாலும்கூட, ‘அடடா… ஒரு மாணிக்கத்தைத்தாம்பா அவ பெத்தெடுத்திருக்கா!’ என்று தாயாரை மட்டும் புகழ்கிற தேசம்தானே இது?! தந்தையை அம்போ என்று விட்டுவிட்டு, அவர்களைக் கண்டுகொள்ளாத உலகம்தானே இது! இதற்கு கௌசல்யையைப் புகழ்ந்த விஸ்வாமித்திரர் மட்டும் விதிவிலக்கா, என்ன?

இங்கே… இன்னொன்றையும் யோசிப்போம்.

தசரதரைப் புகழாமல் இருந்ததற்குக் காரணம்… ஸ்ரீராமரை மட்டும்தானே அவர் காட்டுக்குப் போகச் சொன்னார்! மற்ற பிள்ளைகள் எல்லோரும் அவருடன்தானே இருந்தனர்.

சரி… கைகேயியைப் பாராட்டியிருக்கலாமே என்று தோன்றலாம். அப்படிச் செய்யாமல் இருந்ததற்கு, அவளுடைய மகனான பரதனை, ஸ்ரீராமருடன் அனுப்பவில்லையே, அவள்! ஆகவே, விஸ்வாமித்திரர் அவளைப் புகழவில்லை போலும்!

அடுத்து… சுமித்ரை. ‘அடடா… ஸ்ரீராமர் வனவாசம் செல்லும்போது, ஸ்ரீலட்சுமணரையும் அவருடன் அனுப்பி வைத்தவள் ஆயிற்றே! அவளைப் புகழ்ந்திருக்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழலாம். ஆனால், லட்சுமணன் காட்டுக்குச் சென்றால் என்ன… சுமித்ரையின் இன்னொரு மகன் சத்ருக்னன், அவளோடு கூடவே இருக்கிறானே!

ஆக, ஸ்ரீராமரை வனவாசத்துக்கு அனுப்பினாலும், மற்ற பிள்ளைகள் அருகில் இருக்கிறார்கள் என்கிற நிம்மதி தசரதருக்கு! ‘அப்பாடா… நம்ம புள்ளையாண்டான், பரதனை அனுப்பலை’ என்கிற நிம்மதிப் பெருமூச்சு கைகேயிக்கு. ‘லட்சுமணன் போனால் என்ன… இன்னொரு மகன் சத்ருக்னன் நம்முடன் இருக்கிறான்’ என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் சுமித்ரை. ஆனால், கௌசல்யைக்கு ஒரேயொரு மகன்தான். அவன்… ஸ்ரீராமன். அவனையும் வனவாசத்துக்கு அனுப்புகிற தருணத்தில், அவளால் எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும்? அதனால்தான், பெற்றவளையும் பெற்ற வயிற்றையும் ‘இப்படியொரு அற்புதமான மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே… என்ன நோன்பு நோர்த்தாயோ?’ என்று கௌசல்யையைப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

இதை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சமே நிறைந்துவிடும். ஸ்ரீராமரைப் போலத்தான் ஸ்ரீகிருஷ்ணரும்!

அங்கே… கௌசல்யைக்கு மகனாகப் பிறந்து பெருமை சேர்த்தார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி குடிகொண்டிருக்கிற ஆலயத்தில் துவங்கி, எல்லோரது வீடுகளிலும் அதிகாலையில் ‘கௌசல்யா சுப்ரஜா…’ என்று இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவளின் நாமம். அத்தனைப் பெருமையை தாயான கௌசல்யைக்குத் தேடித் தந்தான் ஸ்ரீராமபிரான்.

இங்கே… தேவகிக்கும் வசுதேவருக்கும் மைந்தனாகப் பிறந்து, ‘புத்திரன்’ எனும் நிதியாக, ஐஸ்வரியமாகப் பிறந்து, அவர்களைப் பெருமைப்படுத்தினான் ஸ்ரீகண்ணபிரான். ராமாவதாரமாகட்டும்… கிருஷ்ணாவதாரமாகட்டும், பகவான் தன்னுடைய கருணைக் குணங்களை, தயாளப் பண்புகளை ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்த்திக் கொண்டே இருந்தான் என்பதே உண்மை!

சரி… ‘வசுப்ரதஹா’ என அடுத்தடுத்து இரண்டு முறை சொல்லப்படுவதற்கு என்ன காரணம்?

முதல் முறை சொல்லப்படும் திருநாமம், புத்திரன் எனும் நிதியை அளித்தவன் என்று பார்த்தோம்; அடுத்ததாக மீண்டும் ஒருமுறை ‘வசுப்ரதஹா’ என்று சொல்லி, ஸ்ரீகிருஷ்ணரைப் புகழ்கிறது ஸ்லோகம்.

குலசேகர ஆழ்வார், தேவகியின் புலம்பலாக பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார். ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக வளர்ந்தவனல்லவா, கண்ணபிரான்?! தேவகியின் மகனாகப் பிறந்தாலும், அடுத்த கணமே யசோதையின் மைந்தனாக, நந்தகோபனின் பிள்ளையாக வளர்ந்தவனல்லவா, குழலூதும் கோமகன்!

தேவகியைச் சொல்லும்போது, ‘பெற்றும் பேறு இழந்தவள்’ என்கிறார் குலசேகர ஆழ்வார். பிறந்ததும் யமுனையின் அக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, யசோதையின் பிள்ளையாகப் போய்விட்டான், கண்ணபிரான். அங்கே, அவனது நடையையும் ஓட்டத்தையும் விளையாட்டுக்களையும் சேட்டைகளையும் கண்டு ரசித்தவள், அவள்தானே? அதனால்தான், ‘பெற்றும் பேறு இழந்தவள்’ என்று தேவகியையும், ‘பெறாமலே பேறு பெற்றவள்’ என்று யசோதையையும் சொல்கிறார் குலசேகர ஆழ்வார்.

இன்னொன்றையும் சற்றே கோபம் கலந்த வருத்தக் குரலில் கேட்டார், குலசேகர ஆழ்வார்.

‘இந்த உலகத்துக்கே தகப்பன் நீ! ஆனால், உன்னைப் பலரும் பிள்ளையாகவே பாவிக்கிறார்கள். அப்படி நினைக்கிறவர்களுக்கெல்லாம் நீ பொய்யாகப் பிள்ளைபோல் காட்சி தருகிறாய்; பேரருள் புரிகிறாய். ஆனால், உன்னுடைய பிள்ளையான என்னை மட்டும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறாயே… இதென்ன நியாயம்? எனக்கு அருள் புரியமாட்டாயா?’ என ஏக்கத்துடன் பாடுகிறார், குலசேகர ஆழ்வார்.

நாமும் இதே ஏக்கத்துடன் பிரார்த்திப்போம்; அவனுடைய திவ்விய நாமங்களை வாயாரச் சொல்லுவோம்; குலசேகர ஆழ்வாருக்கு அருள்பாலித்த பகவான், நமக்கும் கடாட்சத்தை அருளுவான்!

- இன்னும் கேட்போம்…

–நன்றி சக்தி விகடன்

இதன் முந்தைய பகுதிகள்:

Advertisement
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 78 other followers