4- கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்



ஞ்ச பூதங்களால் ஆனது நம் உடல். அதேபோல், பரப்பிரம்மத்துக்கு பஞ்சப் பிராகாரங்கள் உள்ளன. அவற்றை, பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாக உள்ளன என்று பார்த்தோம், இல்லையா?!

மேலும், பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டநாதனின் திருக்கோலம்; அதாவது ஸ்ரீமந் நாராயணன். வைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை. வியூக மூர்த்தம் என்பது, திருப்பாற்கடலில் திருமாலின் திருக்கோலம்; அதாவது அவதாரங்களுக்கு முந்தைய திருமேனி. விபவாதாரம் என்பது, திரு அவதாரத் திருக்கோலங்கள். அந்தர்யாமி என்பது, நமக்குள் குடிகொண்டிருக்கிற இறைத் தன்மையின் அரூப நிலை. ஆலயங்களில் இன்றைக்குத் தரிசிக்கக் கிடைக்கிற திருமேனிதான், அர்ச்சாவதாரக் கோலம் என்றும் பார்த்தோம்!

இதையடுத்து, 147-வது திருநாமத்தில் இருந்து இறுதி வரைக்கும், விபவாதாரத்தைப் பற்றி மிக அருமையாக, ஆத்மார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.கீதையில், முதலாவது திருநாமம் துவங்கி, 122-வது திருநாமம் வரை, பரரூபமாக இருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனைப் பற்றியும், அவனது பெருமைகளையும் விவரிக்கின்றன. அடுத்ததாக, 123-வது திருநாமத்தில் இருந்து 146-வது திருநாமங்கள் வரை, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள பரந்தாமனின் வியூகாவதாரத்தை எடுத்துரைக்கின்றன.

‘சரி.. அப்படியெனில், அந்தர்யாமியையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லவில்லையா? விவரிக்கவில்லையா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது.

அதாவது, அந்தர்யாமி என்கிற உள்ளுக்குள் இருக்கிற அரூப நிலையை, பரரூபத்துடனும்… அர்ச்சாவதாரத்தை விபவரூபத்துடனும் சேர்த்து, திருநாமங்களாக அழகுறத் தரப்பட்டுள்ளது.

எத்தனை அவதாரங்கள்… எவ்வளவு திருநாமங்கள்! ஆனால் என்ன… 697-ல் துவங்கி 770 வரைக்கும்; அதையடுத்து 989 முதல் 992 வரைக்கும் எந்த அவதாரத்தின் மகிமையையும் மகோன்னதத்தையும் விவரித்துள்ளார்கள், தெரியுமா? கிட்டத் தட்ட 78 திருநாமங்களில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே சிலாகித்துள்ளது கீதை. பின்னே… பாட்டுடைத் தலைவன் ஸ்ரீகிருஷ்ணன்தானே?!

அதில் முக்கியமானதும் முதலாவதுமான திருநாமம், வசுரேதாஹ! வசுரேதன் என்பது ஸ்ரீகண்ணனைக் குறிக்கும் திருநாமம். வசு என்றால் ஜோதி என்று பொருள். வசுரேதன் என்றால், திவ்வியமான ஜோதி வடிவினன் என்று அர்த்தம்.

பராசர பட்டர், தன்னுடைய சீடன் மைத்ரேயரிடம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை விவரிக்கிறார். அப்போது, ‘கம்சனின் தொல்லை தாங்க முடியவில்லை. அவனால் தேசத்தில் அனைவருக்கும் நிம்மதியே போய்விட்டது. நீங்கள்தான் அருளவேண்டும்’ என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்! அப்போது, திருமால்… ”என் தலையில் இருந்து, வெளுத்த முடி ஒன்றையும் கறுத்த முடி ஒன்றையும் கிள்ளிப் போடுகிறேன். வெளுத்த முடி, ஸ்ரீபலராமனாகத் தோன்றுவான். கறுத்த முடி, நானாகவே அவதரிப்பேன்” என்று சொல்லி அருளியதுடன், அப்படியே பிறப்பெடுத்தாராம் ஸ்ரீமந் நாராயணன். ஆக, பகவானின் தலைமுடியானது கூட தேஜஸ் பொருந்தியதாக, ஒளி படைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தன்னுடைய சீடனுக்கு அற்புதமாக விளக்கியுள்ளார் பராசர பட்டர்.

ஆக மொத்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒளிமயமானவன்; தேஜஸ் நிரம்பியவன் என்பதையே அட்சரம் பிசகாமல் வலியுறுத்துகின்றனர் சான்றோர்!

நம்மாழ்வார் மட்டும் சும்மா இருந்துவிட்டாரா, என்ன? ஒளி, ஒளி, ஒளி… ஒளிமயமானவன் ஸ்ரீகிருஷ்ண பகவான் என்பதை தன்னுடைய பத்துப் பாடல்களில் மிகப்பிரமாதமாக எடுத்துரைத் திருக்கிறார். ‘ஆதி எம் சோதி உருவை அங்கு வைத்தாற் போன்று’ என்று பாடுகிறார்.

அதாவது, ஆதியும் ஜோதியுமான உருவம் கொண்டிருக்கிற  பரந்தாமன், பரமபதத்தில் இருக்கிற நிலையைப் போலவே இங்கேயும் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தான் என்று உருகுகிறார் நம்மாழ்வார். அதுமட்டுமா? எத்தனை இடர்கள் வந்தாலும், ஸ்ரீகண்ணனின் நாம சங்கீர்த்தனங்களைச் சொல்லி வந்தோமானால், வாழ்வில் உய்யலாம் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

அதுவும், பகவானின் திருநாமங்களை எப்படிச் சொல்ல வேண்டுமாம்?

ஆடிக்கொண்டே திருநாமங்களைச் சொல்ல வேண்டுமாம்! அந்த ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தலை காலைத் தட்டவேண்டும்; கால்கள் தலையைத் தட்ட வேண்டும். ‘என்னடா இவன்… தலை கால் புரியாம ஆடுறானே…’ என்போமே! அந்த அர்த்தத்தில், தன்னையே மறந்து இறைவன் ஒருவனையே நினைந்து, ஆடவேண்டும் என்கிறார் நம்மாழ்வார்.

‘இந்தக் காலத்தில், இப்படி ஆடினால், சுற்றியிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’ எனும் கேள்வி எழலாம். இப்போது நம்மிடையே தோன்றியுள்ள வினாவுக்கு, அப்போதே விடை அளித்துவிட்டார் நம்மாழ்வார்.

எப்படி?

பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லியபடி தன்னையே மறந்து ஆடும்போது, எவரேனும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள் என்றால், அதற்காகக் கவலைப் படாதீர்கள்; வெட்கப்படாதீர்கள்; சட்டென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு, நாமசங்கீர்த்தனம் சொல்வதையும் நிறுத்திவிட்டு, உடைந்துவிடாதீர்கள். அவர்கள் கைத்தட்டுகிறார்கள், அல்லவா? அந்தக் கைத்தட்டலுக்குத் தக்கபடி, உங்களின் ஆட்டத்தை மாற்றி ஆடுங்கள்; திவ்விய நாமங்களைச் சொல்லிக் கொண்டே ஆடுங்கள். உங்களின் ஆட்டமும் பாட்டமும் பார்த்து, மலைத்துப் போய், வியந்தும் நெகிழ்ந்துமாக, அவர் களும் உங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு வந்துவிடுவார்கள்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்குவார்கள் என குழம்பிய மனத்துக்குத் தெளிவூட்டுகிறார் நம்மாழ்வார்.

ஒரு விஷயத்தைத் துவங்குவதுதான் நம்முடைய வேலை; அதைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது இறைவனின் கடமை. திருப்பதிக்குப் போய், க்யூவில் நிற்பதுதான் நம்முடைய வேலை. அந்தக் கூட்டம் நெட்டித் தள்ள, நெட்டித் தள்ள… திருவேங்கடமுடையானுக்கு அருகில் போய்த்தானே ஆகவேண்டும்?! அதேபோல், பகவானின் நாமசங்கீர்த்தனம் செய்து பாடிக் கொண்டிருப்பது தான் நம்முடைய பணி; தன்னுடைய திருவடியில் நம்மைச் சேர்த்துக் கொள்வது இறைவனின் கடமை! நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், இறைவன் தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் தெரிவிக்கிறான்…”நான் பிறக்காதவனாகவே; நான் சரீரத்துடன் பிறக்காதவனாகவே; அப்படிப் பிறந்தாலும், சர்வேஸ்வரத்தை விடாதவனாகவே…” என அருள்கிறார்.

அதாவது, மனிதர்களைப் போல் உடம்புடனோ அவர்களுக்கு உண்டான கர்ம நியதிகளுடனோ பிறக்கவில்லை. அப்படி மனித உருவெடுத்து வந்தபோதிலும், என் குணங்களை, எந்தத் தருணத்திலும் விட்டுவிலகவில்லை என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆக, தன்னுடைய குணங்களை எந்தத் தருணத்திலும் விட்டு விலகாத ஸ்ரீகிருஷ்ணர், அவருடைய குழந்தைகளான நம்மை மட்டும் விட்டுவிட்டு, விலகிவிடுவாரா என்ன?

பகவானை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைப்போம்; அவர் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பார்!

- இன்னும் கேட்போம்…

–நன்றி சக்தி விகடன்

இதன் முந்தைய பகுதிகள்:

Advertisement
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 79 other followers