இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியம்! -டி.எம்.எஸ்.


http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-09-01/images/t-m-soundarajan-02-05-09.jpg

சுஜாதா கூறுகிறார்…..

மெரீனாவில் மாலை நடந்து செல்லும்போது, சென்னையின் பல பெரிய மனிதர்கள் எதிரில் செல்வார்கள்.

பீட்டர் அல்ஃபோன்ஸ், ஏவி.எம்.குமரன், ஆர்.எம். வீரப்பன்… இப்படிப் பலர் கடக்கும்போது, ஒரு புன்னகையோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. விளம்பரம் போல ஒரு ‘ஹம் ஹை நா’ கையசைப்போ பரிமாறிக் கொள்வோம்.

போன வாரம் டி.எம்.எஸ்., சந்தன கலர் சபாரி சூட்டுடன், சென்ட் வாசனையுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தபோது, பேச வேண்டும் என்று தோன்றியதன் காரணம் – இளம் வயதில் அவருடைய பல பாடல்கள் என்னைக் கவர்ந்திருக் கின்றன.

இப்போதுகூட ‘அவளுக்கென்ன‘வோ, ‘வந்த நாள் முத‘லோ, ‘அதோ அந்தப் பறவை போல‘வோ, ‘அந்த நாள் ஞாபக’மோ, ‘நான் ஆணையிட்டா’லோ டி.வி-யில் வரும்போது, விரல் சேனல் தாவத் தயங்குகிறது.

“எத்தனை பாட்டு பாடியிருப்பீங்க? எல்லாப் பாட்டும் நினைவிருக்கா?”

“கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடினதுதான் முதல் பாட்டு. அதிலிருந்து நான் பாடின பாட்டெல்லாம் நோட்புக்கில் வரிசையா பாடின தேதி, அதற்குப் பெற்ற தொகை எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கேன். ஆயிரக் கணக்கில் இருக்கும்!’’

‘‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

‘‘மூணு விளக்கம் இருக்கு. ‘டி’ங்கறது எங்க சௌராஷ்டிர கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கும் பத்திய உணவு சார்ந்த ஊர்ப் பெயர் – தொகுளுவா (Thoguluva), ‘எம்’ங்கறது மீனாட்சி ஐயங்கார்(!), ‘எஸ்’ – சௌந்தர்ராஜன்.

இன்னொரு விளக்கம் – தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் இந்த மும்மூர்த்திகளுடைய இனிஷியலும் எனக்குக் கிடைச்சது ஒரு பாக்கியம்.

மூணாவது – ட்ரான்ஸென்ட்டல் மெடிட்டேஷன் சர்வீஸ், என் பாட்டுகள் மூலம் கொடுக்கறது!

பாடும் குயிலின் இசைப் பயணம்‘னு என் வாழ்க்கையை நானூறு பக்கம் புத்தகமா போட்டிருக்காங்க, மணிவாசகர் பதிப்பகத்துல! படிச்சுப் பாருங்க!”

‘‘உடல்நிலை எப்படி இருக்கு?’’

“டயபடீஸ் தொல்லை கொடுக்குது. கால் வீங்கிக்குது. இப்பக் கொஞ்சம் காது கேட்கலை. அதனால, மத்த பேரோடு பேசும் போது இரைச்சலா பேச வேண்டியிருக்குனு ஹியரிங் எய்டு வெச்சிருக்கேன். நிறையப் பாடிட்டேன். இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியமா இருக்குது!” என்றவர், சின்ன மூன்றறைப் பெட்டியைக் காட்டி, “பாருங்க… தனித்தனியா காலை, மத்தியானம், இரவுனு ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மாத்திரை சாப்பிடறேன்!” என்றார்.

“நானும்தான்!” என்றேன்.

“பெரிய பெரிய நடிகர்களெல்லாம் என் குரலைப் பயன்படுத்தி, சினிமாவிலேயும் அரசியல்லேயும் உச்சத்துக்கு உயர்ந்தாங்க!’’

‘‘அவங்க உங்களுக்கு நன்றி சொன்னாங்களா?”

உதட்டைப் பிதுக்கி, “ம்ஹூம்..! ஆனா, அவங்க எல்லாம் இறந்து போயிட்டாங்க. குரலில் மட்டும் உசுரோட இருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்க பாராட்டு போதும்! இப்பக்கூட சிங்கப்பூர்ல ஒரு பாராட்டு விழாவுக்கு அழைச்சிருக்காங்க. ஏப்ரல்ல போறேன்!”

“டயபடீஸைப் பார்த்துக்குங்க. இருநூறுக்கு மேல போஸ்ட்பிரண்டியலைத் தாவ விடாதீங்க. தினம் நடங்க. பாட்டை விட்டுராதீங்க!” என்றேன்.

“வரேங்க…” என்று கற்பகவல்லியின் ஆனந்த பைரவியைக் கோடி காட்டிவிட்டு, எழுந்து சென்றார் டி.எம்.எஸ்.

‘‘எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தைத் தந்ததே முருகப் பெருமான்தான்.

சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி… அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்! எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்!

ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன்.

அவ்ளோதான்… பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. ‘கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்’னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்.

ஒருமுறை… காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும் அடுத்ததா… அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது.

சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார்.

இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’

- இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

31-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

தன் முதல் படமான 16 வயதினிலே-க்கு பிறகு பாரதிராஜா தன் பரிவாரங்களோடு இந்த ஆண்டு மீண்டும் ஒரு சாதாரண கதையோடு கிழக்கே போகும் ரயிலில் வந்தார். “ஊரில் கவிதை எழுதித்திரியும் ஒரு உருப்படாத வாலிபனுக்கும், கபடமில்லாத ஒரு பெண்ணுக்கும் காதல். காதலுற்ற நாயகன் நகரத்திற்கு போய் பெரிய கவிஞனாகத் திரும்பி வந்து நாயகியை கைபிடிக்கிறான்.” இதுதான் கதை. புதுமுகங்களான ராதிகாவும், சுதாகரும் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஜீவனூட்டினார்கள். 16 வயதினிலே போலவே இந்த படத்திற்கும் மிக அருமையான பாடல்களைத் தந்திருந்தார் இளையராஜா.

இந்த படத்தில் நடிப்பதற்காக வந்த ராதிகாவைப் பார்த்து “என்ன சார் இந்த மாதிரி ஒரு பொண்னை செலக்ட் பண்ணியிருக்கீங்க!” என்று பாரதிராஜாவிடம் உதவி இயக்குனரான பாக்கியராஜ் சொல்லியிருக்கிறார். காரணம் ராதிகா அணிந்து வந்திருந்த நாகரீகமான உடையைப் பார்த்த அவருக்கு கிராமத்து நாயகி வேடம் பொருந்துமா என்று சந்தேகம். ஆனால் படத்தில் ஒரு எதார்த்தமான கபடமில்லாத நாயகிக்கு நன்றாகவே பொருந்தியிருந்தார்.

சுத்த சாவேரியில் அமைந்த “கோயில் மணியோசை” பாடலின் அழகான வர்ண மெட்டும், மலேசியா வாசுதேவன், ஜானகியின் குளிர்ச்சியான குரல்களும் கண்ணதாசனின் வரிகளும் மனதிற்குள் வந்தமர்ந்து போகமறுக்கச் செய்யும். கோயில் மணியோசையை காதல் சமிக்ஞை ஆக்கியதும் இந்த பாடலில்தான்.

சுத்ததன்யாசி ராகத்தில் மாஞ்சோலை கிளிதானோ… மாந்தானோ… என்ற பாடலை பாட இளையராஜாவின் தேர்வு மிகச் சரியான பொருத்தமாக இருக்கும். பாடலைப் பாடியது ஜெயசந்திரன். இந்த பாடலில் பரத நாட்டியமே ஆடத்தெரியாத ராதிகாவை ஓரளவு நன்றாகவே படம்பிடித்திருப்பார் பாரதிராஜா.

இந்தப் படத்தில் வானம்பாடி கவிஞர் சிற்பி எழுதிய மலர்களே… நாதஸ்வரங்கள்… என்ற ஒரு அருமையான பாடலை ஹம்சத்வனி ராகத்தில் அமைத்திருந்தார் இளையராஜா. இசைத்தட்டில் வெற்றிபெற்ற அந்தப் பாடல் ஏனோ படத்தில் இடம்பெறவில்லை.

தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற நாயகனுக்கு பாட்டெழுதுவதென்றால் உயிர் என்று தெரிந்து கொண்ட திருடர்கள் நாயகனை பாடச் சொல்லி கதிரெல்லாம் திருடிச் செல்வது போல ஒரு காட்சி வரும்.ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு என்ற பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கேட்டாலே போதும் கதிரறுப்பவர்களுக்கு அலுப்பே தட்டாது.

இளையராஜாவின் இசையில் பாக்யராஜ் எழுதிய முதல் பாடல் இந்த ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு பாடல்.

ரயில் செல்லும் ஓசையை அடித்தளமாக வைத்து பூவரசம்பூ பூத்தாச்சு… பாடலில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் இதயத்தின் சிறகடிப்பையும் தன் இசையில் வெளிப்படுத்தியிருப்பார். ஜானகியின் குரலிலும் இது பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும்.

ஒரு உணர்ச்சியை இசையில் படம் பிடித்துவிடுவதைவிட ஒரு இசையமைப்பாளருக்கு வேறு என்ன வெற்றிவேண்டும்.

–தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும் – வைகாசி அனுஷம் – மஹா பெரியவா ஜெயந்தி


மேலே உள்ள நரசிம்மர் ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமில்லை, நம்ம ஹிந்து கேஷவ் தான்…

மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!

ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.

நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.

காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.

“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?

அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.

தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.

காஞ்சி மகானின் கருணை நிழலில்

1-ஸ்ரீ-நரஸிம்ம-வைபவம்!—வேளுக்குடி-ஸ்ரீ-கிருஷ்ணன்


புதிய தொடர்

அஹோபிலே கருட சைல மத்யே

க்ருபாவசாத் கல்பித சன்னிதானம்

லஷ்ம்யா சமாலிங்கித வாமபாகம்

லஷ்மி ந்ருஸிம்மம் சரணம் பிரபத்யே

ஸ்ரீயத் பதியான சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் சம்சாரிகளின் உஜ்ஜீவனத்துக்காக எத்தனையோ அவதாரங்களைப் பண்ணி அருளுகிறான். பலப்பல அவதாரங்களை ஆழ்வார்களும் அனுபவித்திருக்கிறார்கள். சாஸ்திரம் சொல்லுகிறது. ‘அஜாயமானஹா பஹுதா விஜாயதே’ பிறப்பே இல்லாதவனான பெருமான் பல பிறவிகளாகப் பிறக்கிறான். நம்மைப் போலக் கர்மத்தாலே உந்தப்பட்ட பிறப்பு பகவானுக்குக் கிடையாது. அவன் இச்சையாலே அவன் ஆசைப்பட்டு, பிறக்கிறானே தவிர நம்மைப் போலே நிர்பந்திக்கப்பட்டு அவன் பிறப்பது கிடையாது. பிறப்பில்லாத அவன் பல படிகளாகப் பிறக்கிறான்.

பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ என்பதும், ‘சென்மம் பலப்பல செய்து’ என்பதும் நம்மாழ்வாருடைய திருவாக்கு. இத்தனையும் பிறந்தது எதற்காக?

சம்சாரி சேதனனாக ஜீவாத்மாவை திருத்தி, பணி கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் இத்தனை அவதாரங்களையும் பண்ணினார். தான் வைகுந்தத்திலே மட்டுமிருந்தால் கீழே கிடக்கிறவனைக் கைதூக்கிவிட முடியாது. கிணற்றுக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டான். சகதிக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டால், எவ்வளவு தூரம் ஒருவனால் கைகொடுக்க முடியும்? கை எட்டுகிற அளவுதான் நீட்ட முடியுமே தவிர, அதற்கு மேல் கிணற்றில் விழுந்தவனைக் கைகொடுத்துத் தூக்கிவிட வாய்ப்பில்லை. நாமும் அந்தப் பள்ளத்துக்குள்ளே குதித்தாலொழிய நம்மால் அவனைத் தூக்க முடியாது.

அதேபோன்ற செய்கைதான் பகவானுடையது. நாமெல்லாம் பள்ளத்திலே விழுந்திருக்கிறோம். அதை ‘தூராக்குழி’ என்கிறார்கள் ஆழ்வார்கள். ‘அகங்கார மமகார காம க்ரோத லோப மதம் மாச்சர்யம்’ இவை ஒவ்வொன்றும் நாம் இருக்கும் பெரிய குழிகள். முப்பது அடி நாற்பது அடி கிணறு பார்க்கிறோம். கோவை பக்கம் போனால், கிணறுகள் 200 அடி 250 அடி என்று ஆழமிருக்கும். வடக்கே போனோமென்றால் ஆயிரம் அடி போட்டிருக்கிறார்கள். நாம் கிடக்கும் பள்ளம் ஆயிரமில்லை; பத்தாயிரமில்லை; லட்சமில்லை; அடி காண முடியாத மகாக் குழி, இந்த சம்சாரம் என்னும் மகார்ணவம்.

ஆளவந்தார் என்ற மகான் தெரிவிக்கிறார் ‘அபராத சஹஸ்ர பாஜனம்.’ அதாவது, ‘ஹே பகவன், பாவக் கடன்களை ஆயிரம் ஆயிரமாக சேர்த்து வைத்திருக்கிறேன். பயங்கரமான பெரியதான சம்சாரக் கடலின் நடுவில் விழுந்துவிட்டேன்.’

கடலின் மேல் பகுதியில் விழுந்திருந்தால் கூடப் பரவாயில்லை.அதன் ஆழத்தில் போய் விழுந்துவிட்டால் கை பிடித்துத் தூக்கக்கூட முடியாதே. அவ்வளவு ஆழத்திலே நாம் இருக்கிறோம். அவனோ, எவ்வளவோ உயரத்தில் இருக்கிறான். உயரத்தில் இருக்கிறவன் ஆழத்தில் இருக்கிறவனைக் கைபிடித்துத் தூக்க, இறங்கினால்தான் முடியும். அப்படி இறங்குவதைத்தான், அவதாரம் என்று சொல்கிறார்கள்.

பரந்தாமன் எடுத்தது ஆயிரம் ஆயிரம் அவதாரங்கள். அவற்றில் ஒரு பத்தை மட்டும் எடுத்து பெரியவர்கள் எல்லாம் அனுபவித்திருப்பதால், பத்து மட்டும்தான் அவனுடைய அவதாரங்கள் என்று சொல்ல முடியாது. யாருமே பத்து என்றும் சொல்லவில்லை. இருபது என்றும் சொல்லவில்லை. ஜென்மம் பலப்பல என்றும், ஜென்மங்கள் ஓடிப்போயின என்றும்தான் சொல்லியிருக்கிறார்கள். அத்தனையும் எதற்கு? அடியவர்களை ரக்ஷிப்பதற்காக. துட்டர்களை நிரசனம் பண்ணுவதற்காக. அப்படியொரு அவதாரம்தான் நரசிம்மாவதாரம்!

அந்தப் பத்து அவதாரங்களுக்குள்ளே, முதல் ஐந்து அவதாரங்களான, மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம், வாமன அவதாரம் இவை ஐந்தும் முதல் யுகத்தில் நடந்தவை. அடுத்துப் பரசுராம, ராமாவதாரங்கள் த்ரேதா யுகத்தில் நடந்தவை. பலராம கிருஷ்ணாவதாரங்கள் த்வாபர யுகத்தில் நடந்தவை. கடைசியாகக் கலி யுகத்தில் கல்கி அவதாரம் இனிமேல் நடக்கப் போகிறது. அப்படியானால், முதல் யுகத்துக்கானப் பெருமை, ஐந்து அவதாரங்களும் அந்த யுகத்தில் நடந்தன என்பதுதான்.

அதிலும் ஸ்ரீ நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. யாதெனில், நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள். நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள். ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். இதை ‘சிதாக்ஷீர நியாயம்’ என்று சொல்வார்கள்.

வைபவம் வளரும்…

–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்

26-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்


இதன் முந்தைய பகுதி…

உடம்பிலே உயிர் இருக்கும்போது மனது செயல்படுகிறது. உயிர் போய்விட்டாலோ அதோடு அதுவும் போய்விடுகிறது. உடம்பு, மண்ணோடு மண்ணாகவோ சாம்பலாகவோ ஆகிவிடுகிறது. உயிரோடு போன மனது அதன்பின் என்னவாகிறது? அதைத்தான் ஆத்மா என்கிறோமா? – இப்படிக் கேள்விகள் எழுகின்றன. இதற்கு பெரியவர் வெகு அழகாக தன் பாஷையில் கூறியிருக்கும் பதில் சிந்திக்க வைக்கிறது.

‘நிஜ ஆசாமி ஒருத்தன். அவன் ராஜா வேஷம் போட்டுக் கொள்கிறான். அவன் ஒருவன்தான். ஆனால், வேஷம் போட்டுக் கொண்டதால் அவன் ராஜாவாகவும் பார்க்கப்படுகிறான். பார்க்கப்படுகிறானே யொழிய ராஜாவுக்குரிய அதிகாரம், சுகம், செல்வாக்கு எதுவும் அவனுக்குக் கிடையாது. பின், வேஷத்தையும் அவன் கலைக்கிறான். திரும்ப, அவன் அவனாக ஆகி விடுகிறான்.

இங்கே அவன்தான் ஆத்மா… அவன் போட்ட ராஜா வேஷம்தான் மனது!

இன்னொரு உதாரணத்தையும் கூற முடியும்.

ஒரு கயிறு பாம்பாகத் தெரிகிறது. கயிறே இல்லை என்றால், இப்படி பாம்பாக தோற்றம் ஏற்பட்டு நாமும் நினைத்துப் பார்த்திருப்போமா? ஆக, கயிறாகிய ஆத்மா இல்லை என்றால் பாம்பாகிய மனக் கற்பனைக்கும் இடமில்லை. இப்படித் தான் ஆத்மாவுக்கு வேறாக அது இருப்பதால் மட்டுமே மனம் உருவாகிறது. உருவாகிறது என்பதும் சரி; உருவாக்கப்படுகிறது என்பதும் சரி; ஒன்றுதான்.

அப்பா அம்மா சேர்க்கையில், விந்து சுரோணிதக் கலப்பில், உயிரியக்க செயல்பாட்டில் நாம் பிண்டமாக உருத்திரள்கிறோம். ஒரு குறித்த கால அளவுக்குப் பின் பிறப்பு எனும் பெயரால் கருப்பையைவிட்டு பூமிக்கு வந்து நம் கால்களால் நிற்கப் பழகுகிறோம்.

இவ்வேளையில் காதில் விழும் சப்தத்தால் மனம் உருவாகிறது. சப்தத்துக்குண்டான மொழி தாய்மொழியாகிறது. கூர்மையாக சிந்தித்துப் பார்த்தால், நாம் உடம்பும் உயிருமாக ஒரு காலிப் பாத்திரம் போல் தான் தொடங்குகிறோம். அந்தப் பாத்திரம், மெல்ல சப்தமாகிய பேச்சால் மனமாகி நிரம்புகிறது.

இப்படி நிரம்பி வழிவதை தடுத்து நிறுத்தி நினைவைக் கட்டிப்போடுவதை, எண்ணங்களே இல்லாதபடி ஆவதை யோகம், தியானம் என்கிறோம். இவற்றால் பிறந்தபோது இருந்த அந்த முழுமையான காலிப்பாத்திர நிலையை அடைவதே மனோநாசம். இந்த நிலையில் அழியாத இன்பம் இருக்கிறது.

இதையே பெரியவர், ‘மனதை இழப்பதே பெரிய மோட்சம்’ என்கிறார். ஆனால், இது அத்தனை சுலபமானதா என்ன? சதாசர்வ காலமும் இந்த மனது ஆசாபாசங்களில் உழன்று கொண்டே இருந்து உயிர் பிரியும் போதும் பாடாபடுத்தி எடுத்து விடுகிறதே!

‘ஐயோ… என் பெண்டு பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போகிறேனே… அடடே… சேர்த்து வைத்த எதையும் துளிகூட அனுபவிக்காமல் செத்துப் போகப் போகிறேனே..!’ – இப்படி உயிர் பிரியும் முன்வரை மனதால் துடிக்காதவர்கள், தவிக்காதவர்கள் இருக்க முடியுமா? இதைத் தான் மனசிடம் சிக்கிக் கொள்வது என்கிறார் பெரியவர். கொஞ்சம் மாற்றி, ஆன்மா இங்கே மனசிடம் சிக்கிக் கொண்டுவிட்டது எனலாம்.

எப்படி?

தான் புரிந்த கர்மச் செயல்பாடுகள் எண்ணங்களாய் மனதில் பதிவாகிவிட, அதற்கேற்ற போக்கும் நிலைப்பாடும் தானா உருவாகி விடுகிறது.

இதைத்தான் நம் தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்கிறோம் என்றார். இந்தத் தலை எழுத்து என்கிற ‘கான்செப்ட்’ கூட இந்து மதத்தில் மட்டும் காணப்படும் ஒரு ஆச்சரியமான விஷயம். தலையைத் தட்டியும், நெற்றியைச் சுட்டிக் காட்டியும் ‘தலைஎழுத்து’ என்று நாம் சொல்வதுகூட மனதின் ஒரு பாவனைதான்.

உண்மையில், தலையான எழுத்தே தலை எழுத்தானது. தலையான எழுத்தென்பது எது? நம் ஒட்டுமொத்த வாழ்வை சுயசரிதையாக எழுதினால் அது மிக விரிவான தலை எழுத்து. ரத்னச் சுருக்கமாக எழுதினால், அதுதான் தலைஎழுத்து. இதைக்கூட நம்மில் சிலர் எப்படிச் சொல்கிறோம் தெரியுமா? ‘ஹூம்… என் தலைல அந்த ஆண்டவன் இப்படி எழுதிட்டான். என்ன செய்ய? எழுதினதை மாத்த முடியாதே…’ என்று புலம்புகிறார்கள்.

இது முட்டாள்தனமான மனோபாவனை.

அந்த ஆண்டவன்தான் நம் தலை எழுத்தை எழுதுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இன்றைய மக்கள் தொகை 700 கோடி.

‘இத்தனை பேருக்கு தனித்தனியே மிகமிக வித்யாசமாக யோசித்து யோசித்து எழுத ஒருவரால் முடியுமா?’ என்ன ஒருவர் என்கிறீர்கள்? அவர் கடவுள்..! உலகின் சுப்ரீம் பவர். ‘கடவுள் எதற்கு எழுத வேண்டும்? ஒருவனை அரசனாக, ஒருவனை ஆண்டியாகப் படைத்து அவனுக்கு ஆகப்போவது என்ன?’

‘ஒரு பொழுதுபோக்குக்காக அப்படிச் செய்வதாகவே வைத்துக் கொண்டாலும், எல்லோரையும் பணக்காரர்களாக, பேரழகர்களாக, வியாதியற்ற வர்களாக படைத்துவிட்டுப் போய்விடலாமே!’

- இப்படி தலையெழுத்தைத் தொட்டு கடவுள் சிந்தனைக்கு ஆளாகி கேள்விகள் முளைத்துக் கொண்டே போகின்றன.

இப்படிக் கேள்வியாகக் கேட்கும்போதே நமக்கு ஒரு உண்மை உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புலனாவதையும் உணரலாம். என்ன அந்த உண்மை? நிச்சயம் கடவுள் இந்த தலையெழுத்து சமாச்சாரத்தை எல்லாம் படைத்து சிரமப்பட மாட்டார் என்பதுதான் அது. ஆக, இந்தத் தலையெழுத்து நம் சிந்தனை!

இது எப்படி உருவாயிற்று என்றால் நம் செயல்பாடுகளால் நாம்தான் உருவாக்கிக் கொண்டோம். எது நம் செயல்பாடு? அன்றாட நம் வாழ்க்கைப்பாடுகளே நம் செயல்பாடுகள்தான். இந்த செயல்பாட்டின் வினைகள்தான் இன்ப துன்பமாக, கசப்பு இனிப்பாக, பாவ புண்ணியமாக என்று இருவிதமாக மாறுகிறது.

இதில் ஒருவரின் பாவ புண்ணிய அளவு, ஊர் உலகத்தவர்க்கு தெரியாமல் போகலாம். ஆனால், அதைச் செய்த அவருக்கு தெரியாமல் போகுமா என்ன? போகவே போகாது. சிறு பிராயத்தில் மாந்தோப்பில் கல்லால் அடித்து மாங்கா திருடியதையே மறக்காத மனது, ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாது கற்பழித்து, பின் கொலை செய்து புதைத்து விட்டதை மறந்து விடுமா?

இதைத்தான் ‘தன்னெஞ்சறிவது’ என்றனர்.

தன்னெஞ்சறிவதும் அறிந்ததும் பொய்யாகாது. இந்த அறிந்த சமாச்சாரமே – நினைவாக, அழுத்தமாகப் பதிவாகி விடுகிறது. நினைவு என்பது என்ன? பாஷைதானே! பாஷையின் வடிவம் என்பது என்ன? எழுத்து தானே! அழியாதது எழுத்து… அழியாத நினைவும் எழுத்தாகி, தலை எழுத்தாகக் கூறப்பட்டது.

இந்தத் தலை எழுத்தை நாம் எழுதிக் கொண்டோம். நாம் எழுதிக் கொண்டது நம்மை வழி நடத்த ஆரம்பிக்கிறது. எப்போது?

மனம் என்ற ஒன்று நாசப்படாமல் ராட்சஸ பலத்தோடு இருக்கும்வரை… ஆக, மனதை வெல்லாமல் – அதை இல்லாது செய்யாமல், பிறப்பு இறப்பில் இருந்து ஒருவன் விடுபடவே முடியாது. பாவ புண்ணியங்களை நினைத்து வருந்துவதால், வருந்தித் திருந்துவதால், அதுவரை செய்த செயல்பாடுகளிடம் இருந்து தப்பிக்க முடியாது. அடுத்து வேண்டுமானால் செய்யாமல் இருக்கலாம்.

தீயாக இருந்தால் சுட்டாக வேண்டும்.

நீராக இருந்தால் தாகம் தீர்க்க வேண்டும்.

காற்றாக இருந்தால் புலனாகாது வீசித் திரிய வேண்டும்.

கண்ணாடியாக இருந்தால் கீழே விழும்போது உடைந்தாக வேண்டும்.

பாவ புண்ணிய உயிராக இருந்தால், அதற்கான வினையை அனுபவித்தே ஆக வேண்டும்.

இதற்கு என்ன ஆதாரம்? எதை வைத்து இதை நம்புவது? பெரியவர் வாழ்விலேயே ஒரு சம்பவம்.

பலரும் அறிந்த சம்பவம்தான்! இருந்தும் இங்கே ஒருமுறை அதை சிந்தித்தாலே, இதுவரை எழுப்பிய கேள்விகளுக்கான விடையை நாம் குழப்பமின்றி நெருங்க முடியும்.

ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:

‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.

‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.

‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.

பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.

‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.

‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.

‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.

அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.

- தொடரும்…

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

30-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

என் குரு இளையராஜாவின் இசையை அறிமுகப்படுத்தியபின் நான் அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு, என் குருவுக்கும் அவ்வப்போது போட்டுக் காண்பிப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் குரு இளையராஜாவைப் பற்றி எதுவுமே சொல்லுவதில்லை. ஒரு வித ஆயாசம் கூட அவருக்கு வந்துவிட்டது. இந்த மனுஷனைப் பற்றி என்ன சொல்வது என்றுதான். என் குரு கொண்டாடும் பிருந்தாவன ஸாரங்கா, பூர்ய தனஸ்ரீ, கலாவதி – இளையராஜாவுடையது.

என் குருவைப் பார்க்க ஹரிபிரஸாத் செளராஸ்யா அடிக்கடி வருவார். என் குருவைப் பற்றி பொதுஜனங்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஹிந்துஸ்தானி ஜாம்பவான்களுக்குத் தெரியும். என் குருவின் ஒரு சிறு அங்கீகரிப்பான தலையசைப்புக்காக ஏங்கும் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். செளராஸ்யா அப்படி அடிக்கடி வந்து அவரிடம் ஆசி வாங்கிச் செல்வார். ஒருமுறை அப்படி அவர் வந்திருந்த போது பேச்சு இளையராஜாவைப் பற்றி வந்தது. ஹரிபிரஸாத் செளராஸ்யா இளையராஜாவைப் பற்றிச் சொன்னவற்றை யாரும் நம்ப மாட்டார்கள்.செளராஸ்யா ‘nothing but wind’ என்ற இளையராஜாவின் இசைத் தொகுப்பில் வாசித்திருக்கிறார். தனித்தனி நோட்ஸ்களைப் பார்த்த அவர் அவ்வளவு impress ஆகவில்லை.. ஆனால் வாசிக்க வாசிக்க அவர் அதில் பொதிந்திருந்த மேதைமையைக் கண்டுகொண்டாராம். அதன்பின்பு அடுத்தடுத்த நாட்களுக்கு வீட்டில் ப்ராக்டிஸ் செய்துகொண்டுதான் போனேன் என்றார் அவர்.  ஹரிபிரஸாத் இப்படியெல்லாம் ப்ராக்டிஸ் செய்துதான் ஒருவிஷயத்தைக் கொண்டுவரவேண்டும் என்றிருக்கக் கூடிய ஆள் இல்லை. அவர் உட்கார்ந்த இடத்தில் இசை பொங்கிப் பிரவாகமாக வரும். அவர் என் குருவுக்காக வாசித்த ஹிந்தோளத்தை மூன்று மணி நேரம் கேட்டவன் நான். அப்படியொருவர் சாதகம் செய்துவிட்டு வாசிக்கப்போகிறார் என்றால்? அந்த இசைத்தொகுப்பு வெளியானதும் கேட்டுவிட்டு, தானே கிளம்பி நேரடியாக இளையராஜாவை சந்தித்துப் பாராட்டிவிட்டு வந்தேன் என்றார் அவர்.

பண்டிட் ரவிஷங்கர்பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி இவர்களும் இளையராஜாமீது மிகமிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள்.

–ராபர்ட் சின்னதுரை

தொடரும்…

ஸ்ரீ நரசிம்ஹ ப்ரபத்தி


The shlokam below is Narasimha Prapatti by His Holiness The Jeer. This can be chanted by anyone at any time and submits us to the infinite Mercy of Narasimhar.

NARASIMHA PRAPATTI:
MATA NARASIMHA, PITA NARASIMHA
BRATHA NARASIMHA, SAKHA NARASIMHA
VIDYAA NARASIMHA, DRAVINAM NARASIMHA
SWAMI NARASIMHA, SAKALAM NARASIMHA
ITHO NARASIMHA, PARATHO NARASIMHA
YATHO YATHO YAHIHI, TATHO NARASIMHA
NARASIMHA DEVAATH PARO NA KASCHIT
TASMAAN NARASIMHA SHARANAM PRAPADYE

மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்(4)ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்(3)யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தே(3)வாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்(3)யே

Meaning: 
Mother and father is Narasimha
Brother and friend is Narasimha
Knowledge and wealth is Narasimha
My Lord and my Everything is Narasimha.
Narasimha in this world, Narasimha in the other
Wherever I go, there is Narasimha
Narasimha is the only Lord,there is none other
So, I seek refuge in you, Narasimha   

சகலவிதமான பயங்களைப் போக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹ மந்திரம்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
Follow

Get every new post delivered to your Inbox.

Join 220 other followers