ஏங்குகிறேன் – ஞாநி

சென்ற வாரம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்க வாழ் நண்பர் அருள். ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா.

வெள்ளை மாளிகையில் இரண்டாவது வருடமாக நடக்கும் சிறுவர் – இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சியின்போது நடந்த நிகழ்ச்சி அது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பள்ளிக்கூடங்களில் வழக்கமாக மாணவர்களுக்குப் பயிற்சிக்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போன்றது அல்ல.

மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஹேலீ, அமெரிக்காவின் காஃபிக் கடைகளில் சர்க்கரைப் பொடிகளை அடைத்துத் தரும் காகிதப் பாக்கெட்டுகளுக்கு மாற்றைக் கண்டுபிடித்திருக்கிறாள். “ஸ்டார்பக்ஸ் கம்பெனியின் காஃபிக் கடைகளில் மட்டுமே வருடத்துக்கு 20 லட்சம் பவுண்ட் குப்பை சேர்கிறது. இதை ஒழிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும். அதனால்தான் ஹேலீக்கு இந்த ஐடியாவை வியாபாரமாக மாற்ற மாஸ்டர் கார்ட் கம்பெனி பத்தாயிரம் டாலர் பரிசு அளித்திருக்கிறது” என்று சொன்னார் ஒபாமா. ஹேலீ கண்டுபிடித்தது கரையக் கூடிய சர்க்கரைப் பை. உருளைக் கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரித்தது. ஹேலீக்கு வயது 16!

கான்சாஸ் நகரில் ஆறாவது படிக்கும் வெஸ்லியும் தாம்ப்சனும் மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெறும் டிபன் பாக்ஸ் அல்ல. இதில் காலையில் வைத்த சாப்பாட்டை மதியம் எடுக்கும்போது சாப்பாடு கெடாமல் இருப்பதற்காக அல்ட்ரா வயலட் கதிர்கள் செயல்பட்டு உணவில் கிருமிகள் இல்லாமல் அழித்துவிடும்.

டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மேரியானா ஆடு வளர்ப்பில் மரபியல் அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறாள். தங்கள் பண்ணையில் வளர்க்கும் ஆடுகளின் ரோமம் செயற்கையான நிறத்தில் வளர்க்கப்படுவதை மாற்றி இயற்கையான நிறத்தில் வளர்வதற்கு மரபியல் கூறை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்திருக்கும் மேரியானாவுக்கு வயது 18.

அறிவியல் ஆய்வுகள் செய்து புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்குத் தேவையான நிதியை அவர்கள் பல விதங்களில் திரட்டியிருப்பதை ஒபாமா தன் பேச்சில் சுட்டிக்காட்டுகிறார். டெக்சாஸ் மாநிலத்திலேயே வசதி குறைவான பகுதியான பிரசிடோவில் மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வு செய்தார்கள். “இதற்குப் பணம் திரட்டுவதற்கு, ஆசிரியர்கள் தின்பண்டங்கள் சமைத்து சர்ச் வாசலில் விற்றார்கள். ஒரு ஆட்டை ஏலம் விட்டார்கள். 200 மைல் தொலைவில் போய் மலிவாக உணவு வாங்கிவந்து லாபத்துக்கு விற்றார்கள்” என்று ஒபாமா சொன்னார்.

கடலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதால் கடல் நாசமாவதைத் தடுக்க, ஒரு மாணவன் ஒரு படகைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்த ஆளில்லாத படகை எண்ணெய்ப் படலம் உள்ள கடல்பரப்பில் இயக்கினால், அது அந்தப் படலத்தை நீரின் மேற்பரப்பிலேயே துடைத்து எடுத்துவிடும்.

இன்னொரு மாணவன் நியூயார்க்கைச் சேர்ந்த ஏய்டன் டையர். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுவது எப்படி என்று ஆய்வு செய்தான். மரங்களின் கிளைகள் மிக அதிக அளவு சூரிய ஒளியைப் பெற வசதியான வடிவத்தில் வளர்வதைக் கவனித்து அதைப் பின்பற்றி, சோலார் பேனல்களை அமைத்தால் அதிக சூரிய ஒளி பெறமுடியும் என்று நிரூபித்திருக்கிறான். கிளைகளின் அமைப்புகள் கணிதமுறையில் Fibonacci (ஃபிபனாச்சி) எண் அடிப்படையில் இருப்பதே அவன் ஆய்வுக்கு அடிப்படை. (முதல் இரு எண்களின் கூட்டுத் தொகையாக அடுத்த எண் இருப்பதே Fibonacci எண் வரிசை 0,1,1,2,3, 5,8, 13,21,34,55….. என்று போகும்.) இந்தச் சிறுவனுக்கு வயது 13.

கலிபோர்னியா மாணவி ஏஞ்செலா புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து நேரடியாக புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களுக்கே சென்று வேலை செய்ய வைப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆய்வு செய்திருக்கிறாள். இந்த ஆய்வைத் தொடர்வதற்காக அவளுக்கு சீமென்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் பரிசளித்திருக்கிறது. ஏஞ்செலாவின் வயது 17.

ஜார்ஜியாவில் படிக்கும் இந்தியச் சிறுவன் ஆனந்த் சீனிவாசன், தம் மூளையின் மின்னலைப் பதிவுகளிலிருந்து (EEG) எடுத்த தகவல்களை வைத்து, கணினிக்கு ஒரு செயல் நிரலியை எழுதி அதைக் கொண்டு ஒரு ரோபோ கையை இயக்கமுடியுமா என்று ஆய்வு செய்திருக்கிறான். கை, கால், துண்டிக்கப்பட்டவர்கள், முடக்குவாதத்தில் செயலிழந்தவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பயன் தரக் கூடும். ஆனந்தின் வயது 15. விரல்களில்லாத ஒரு சிறுமி எழுத உதவுவதற்காக, செயற்கைக் கையை உருவாக்கியிருக்கும் அயோவாவைச் சேர்ந்த கேபி, மெக்கன்சி, கேட் மூவரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.

நெவாடாவைச் சேர்ந்த டெய்லர் வில்சன், சிறு அளவில் அணுக்கதிரியக்கமுள்ள பொருள்களை யாரேனும் எடுத்துச் சென்றால் கண்டறியக்கூடிய மானிட்டரை உருவாக்கியிருக்கிறான். துறைமுகங்களில் சரக்கு கண்ட்டெய்னர்களில் யுரேனியம் 234, ஆயுதத்துக்கான புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் இந்த மானிட்டர் சொல்லிவிடும். டெய்லரின் வயது 17.

ஜெசிகா, காட்டன், ஆனா மூவரும் உருவாக்கியிருப்பது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தோரை, தங்க வைப்பதற்கான குடில். இதில் சுத்தமான குடிநீர், விளக்கொளி எல்லாம் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா மாணவன் பெனெடிக்ட் விளையாட்டு வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்த கண்டுபிடித்துள்ள கருவி, விளையாடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டால், அந்த அடி விளையாட்டு வீரரின் மூளையைப் பாதிக்கும் அளவு பலமானதா என்பதை உடனே கண்டறிந்து தெரிவித்து விடும். உடனே வீரரைக் களத்திலிருந்து வெளியேற்றி, சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதே போல ராணுவ வீரர்களுக்கான ஹெல்மெட்டுக்கான கருவியை வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜாக் டட்லியும் சிட்னி டயானியும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாரும் எட்டாவது படிக்கும் மாணவர்கள். பென்சில்வேனியா மாணவன் மரியன் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக விலை மலிவான கருவியை உருவாக்கியிருக்கிறான். இவன் வயது 17.

அமெரிக்காவில் ஸ்டெம் எனப்படும் சயன்ஸ் (எஸ்), டெக்னாலஜி ( டி) , இன்ஜினீயரிங் (ஈ), மேதமேட்டிக்ஸ் ( எம்) ஆகியவற்றைப் பயிற்றுவதற்கான ஒரு லட்சம் பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, ஒபாமா எட்டுக் கோடி டாலர்களையும் இந்தத் துறைக் கல்வியை மேம்படுத்த இன்னொரு 10 கோடி டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறார்.

பணம் மட்டுமே இதில் விஷயம் அல்ல. இந்தியாவில் சில சமயங்களில் இதை விட அதிக பணம் கூட ஒதுக்கப்படுகிறது. அணுகுமுறையே முக்கியமானது. கல்வித் துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் மன நிலை பெரும்பாலும் கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கிறது. விதிவிலக்கானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு, புத்தகம் வாசித்துக் காட்டி அவர்களையும் கூடவே படிக்கச் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே அங்கே செயல்படுகிறது. பல குடியரசுத் தலைவர்கள், அவர்களுடைய மனைவிகள், எழுத்தாளர்கள் இதைச் செய்கிறார்கள். அண்மையில் கூட ஒபாமா, டெக்சாஸ் கல்லூரியில் உரையாற்ற சென்றபோது, அதற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டினார். அவர்களின் வயது 5க்குக் கீழே. மொத்தம் எட்டே குழந்தைகள். அவரைச் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார, படக்கதையைப் படித்தார். நம் நாட்டில் எண்ணூறு மாணவர்களை, தம்மைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு போஸ் கொடுத்து இமேஜ் காட்டும் வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது. குடியரசு மாளிகையில் அறிவியல் கண்காட்சி ஏதும் நடந்ததும் இல்லை.

இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள், பரிசுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை அரசின் விஞ்ஞானத்துறையின் கீழ் உள்ள ஆய்வகங்கள் சார்ந்ததாகவும் உயர்கல்வி முடித்தவர்களுக்கானவையுமாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பெலோஷிப் எனப்படும் உபகாரத் தொகைகள். அவை பள்ளி மட்டத்திலேயே ஆய்வை ஊக்குவிக்கவும் உதவவும் கூடிய சூழல் இங்கு இல்லை.

சென்ற வருடம் மத்திய அரசின் கவுன்சில் ஃபார் சயன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்சின் பொன்விழா விருதுகள் சிறுவர்களுக்கானவை அறிவிக்கப்பட்டன. மொத்தம் வந்த கண்டுபிடிப்புகள் 353. இரண்டே பரிசுகள்தான் தரப்பட்டன. ரூபாய் பத்தாயிரம் பரிசுகள், பார்வையற்றோருக்கான இன்ஃப்ரா ரெட் கதிர் பயன்படுத்தி வழிகாட்டும் ஸ்மார்ட் கம்புகளை உருவாக்கிய தில்லி மாணவன் சந்தனுவும், பைகள்,ஜெர்கின்களில் இருக்கும் சிப்புகளைப் பூட்டுவதற்குப் புது மாடல் பூட்டை உருவாக்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த அன்கித் குமாரும் பெற்றனர். முதல் பரிசான ஐம்பதாயிரத்துக்குத் தகுதியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மெத்தப் படித்த இளைஞர்களில் கூடப் பெரும்பாலோர் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப சலிக்காமல் நேர்த்தியாகச் செய்து தரும் நல்ல வேலையாட்களாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள் முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை இல்லை. இவற்றில் அக்கறை காட்டக்கூடிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மிடம் இல்லாததே இல்லை; எல்லாம் இருந்தது என்று கற்காலப் பெருமைகள் பற்றிப் புலம்புவோரும் அதையும் மெய்யென நம்புவோருமாக ஒரு கூட்டம் இருக்கிறது. எப்போது, எப்படி மாற்றம் வரும்? உங்களோடு சேர்ந்து நானும் ஏங்குகிறேன்.

–நன்றி கல்கி  (ஓ பக்கங்கள்)

சுஜாதா – சிறகு இரவிச்சந்திரன்

ஆங்கில நாவல்களில் காணக்கிடைக்கும் மெலிதான செக்ஸ் எனக்குப் பிடிக்கும். தமிழில் நான் படித்தவரை அது அறவே இல்லை என்று எனக்கொரு கருத்து இருந்தது. அதை மாற்றியவை சுஜாதாவின் கதைகள். அதற்கு முன்னாலெல்லாம் பி.டி.சாமி வர்ணனைகளில் ‘அவளது மேலுதட்டில் லேசாக ரோமம் பூத்திருந்தது‘ என்ற அளவிலேயே  பெண்கள் இடம் பெற்றார்கள். சாண்டில்யன் கொஞ்சம் போல
வழுவழுப்பான வெண்ணைப் பிரதேசம் ‘ என்பார். இதற்கே குமுதம் அவரைச் சுவீகரித்தது. புஷ்பா தங்கதுரை { ஆன்மீகத்துக்கு வேணுகோபாலன் } ‘ அவளது மார்புப்பகுதி மேலெழும்பி இறங்கியது ‘ என்பார். சுஜாதாதான் ‘தாவணியை பூணூல் மாதிரி போடாதே ‘ என்று ஆரம்பித்தார். மீதி வாசகனின் கற்பனைக்கு.

குமுதம் வாசகனான நான் சாண்டில்யனையும் பு.த.வையும் அப்படித்தான் அறிய நேர்ந்தேன். அந்த வழியில் சுஜாதா.. ஆரம்பத்தில் அவ்வளவாக சிலாகிக்கவில்லை.

அனிதா இளம் மனைவிநைலான் கயிறு

நைலான் கயிறு ஜேம்ஸ் ஹேட்லி சேஸைத் தமிழ்ப் படுத்தியது போல் இருந்தது. இது ஒரிஜினல் இல்லை என்றே எண்ணினேன். அனிதா இளம் மனைவி கொஞ்சம் சுவாரஸ்யம் தந்தது. ஆனால் முழுமையான ஈடுபாடு வரவில்லை. சிறுகதைகள் எழுத வல்லவரை நாவல் எழுதப் பணித்தால் இழுவை தான். அதுவும் தொடர் முடிவில் ஒவ்வொரு வாரமும் ஒரு முடிச்சு அல்லது அதிர்வு இருக்க வேண்டும்.

எழுத்தாளனுக்கு பெரிய சங்கடம் அது. அவன் எண்ண ஓட்டம் அந்த முடிச்சு அல்லது திருப்பம் தொட்டே பயணிக்கும். அப்படி எழுத மறுக்கும் பிரபல எழுத்தாளனை தவிர்க்க முடியாவிட்டால் குமுதம் தானே வரிகளை வெட்டி பாதியில் நிறுத்தி விடும். அடுத்த வாரம் விற்க வேண்டுமே? ‘ காலிங் பெல் ஒலித்தது.. அவன்.. ‘( தொடரும்) என்று முடியும் வாரத் தொடர் அடுத்த வாரம் ‘ போய்க் கதவைத் திறந்தான் ‘ என்று ஆரம்பிக்கும். சுஜாதாவாலும் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

குருபிரசாத்தின் கடைசி தினம்நகரம்: சிறுகதைகள்

ஆனால் அவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. அதிலும் ‘ இரண்டு கடிதங்கள் ‘, குருபிரசாத்தின் கடைசி தினம், நகரம், திமிலா.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். என்ன அவைகள் படிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் முடித்தவுடன் காணாமல் போய்விடுகிறது. ஓ ஹென்றி, கொஞ்சம் கானன் டாயில், பெர்ரி மேஸன், அகாதா கிரிஸ்டி என்று அவியலாகத் தருவார். பல விருந்துகளில் அவியல் முழுவதுமாக சுவைக்கப்படுவதில்லை என்பது எனது அனுபவ வெளிப்பாடு. ஒன்று தயிர் { மையக்கரு} புளித்திருக்கும், அல்லது நமக்கு பிடிக்காத காய்கறிகள் {வர்ணணைகள், பாத்திரங்கள்} இருக்கும். வேன்டியதை எடுத்துக் கொண்டு விட்டு விட வேண்டியது தான்.

ஏறக்குறைய பிக்கினி ரேஞ்சில், மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தார். உள்ளே இருப்பது நிஜமா என்று துருவும் பார்வையாளனின் மன ஓட்டத்திற்கு தீனி போடுவது போன்றது இது. அரசு தரும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போலத் தான்.. இட் வில் கன்சீல் தி வைட்டல் திங்க்ஸ்.. ஆனால் ஜனரஞ்சக எழுத்தாளர், எழுத்துலகின் சூப்பர் ஸ்டார், ‘ கனவுத் தொழிற்சாலை ‘க்கு ஆ.விகடனில் அண்ணாசாலையில் பேனரே வைத்தார்கள். நோக்கங்கள் வேறாக இருந்தாலும் மக்கள் கவனத்தைத் திருப்ப பாபா மோதிரம் வரவழைப்பது போல, கழைக்கூத்தாடி வேலையை எழுத்தில் செய்தது அவரது ஸர்வைவல் டெக்னிக்.

அவர் உயரம் அதுவல்ல.. கணையாழியின் கடைசி பக்கங்கள் படி ‘ மீண்டும் இலக்கியச் சகோதரன் உதவிக்கு வந்தான். பழைய கணையாழி இதழ்களையும் தந்தான். பழுப்பேறிய, பாக்கெட் நாவலை விட கொஞ்சம் பெரியதாய் இருந்தன அந்த இதழ்கள். உள்ளே கனமான இலக்கியம். இப்போது நீர்த்து நெடியடிக்கிறது. கடைசி பக்கங்களில் தான் அவரது உலகளாவிய அறிவும் தெளிவும் வெளிப்பட்டது என்பேன்.
அப்புறம் விஞ்ஞான ரீதியான கேள்வி பதில்கள், அதிலும் ரத்தினச் சுருக்கமான பதில்கள், மெலிதான நகைச்சுவை. ஆழ்வார் பாசுரங்கள், அதன் விளக்கங்கள் என்று திசை மாறிப் போனார். திரும்பவும் இழுத்து வந்து கணேஷ் வசந்த் எழுதச் சொன்னார்கள். பாவம் அவருக்கே அதில் பிடிப்பில்லை.


சுஜாதாவின் தாக்கம் எனக்கும் இருந்தது. சொல்வதைச் சுருங்கச் சொல் என்பதான பாணி எனக்குப் பிடித்திருந்தது. { ‘ .. லாம்.. ‘ } சிற்றிதழ்கள் பால் அவருக்குள்ள ஆர்வம் எனக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியது. கவிதைகளின் பால் அவருக்கு ஈர்ப்பு இருந்தது. அது இன்னமும் என்னை வேகப்படுத்தியது.  ஃபிலிம் சேம்பர் விழாவில் எழுதி வைத்து படித்தார். ‘ ஜல்லியடிப்பது ‘ என்ற அவரது பிரபலமான வாசகத்திற்கு பார்வையாளர்கள் கைத்தட்டினார்கள். கூட்டம் முடிந்து அவர் மெதுவாக வெளியேறும்போது முண்டி அடித்துக் கொண்டு மேடையேறினேன். அவர் தோளைத் தொட்டு சிறகு இதழ் ஒன்றை கொடுத்தேன். கையில் இருந்த காகிதங்களுக்கு நடுவில் பத்திரமாக வைத்துக் கொண்டார். ‘ படிக்கிறேன் ‘ என்றார். வழக்கமாக ‘ பார்க்கிறேன் ‘ என்று தான் சொல்வார்கள். இதென்ன நடிகை கவர்ச்சிப்படமா என்று நினைத்துக் கொள்வேன். சுஜாதா படிக்கிறேன் என்றார். செய்வார் என்கிற நம்பிக்கை துளிர்விட்டது.

ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் ‘ பல சிற்றிதழ்கள் எனக்கு வருகின்றன..நானும் விடாமல் படிக்கிறேன். அதில் நம்பிக்கை தரும் இதழ்கள் ‘ என்கிற பட்டியலில் ‘சிறகு’ இருந்தது. இதழ் ஜென்ம சாபல்யம் அடைந்தது.

எல்லா எழுத்தாளர்களைப்போலவே சுஜாதாவுக்கு நிஜ சுஜாதாவிடமிருந்து ஆதரவு இல்லை என்பது நான் அறிந்த ஒரு செய்தி. மேட்டூர் அணைக்கட்டில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொறியாளர் என்கிற முறையிலும் பிரபல எழுத்தாளர் என்கிற முறையிலும் சுஜாதாவிற்கு அழைப்பு போனது. அவர் அப்போது பெங்களூரில் இருந்தார். மரியாதை நிமித்தம் விழா ஏற்பாட்டாளர்கள் அவர் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். பேசியது அவரது மனைவி. விவரம் சொல்லி கிளம்பி விட்டாரா என விசாரித்திருக்கிறார்கள். என்ன நிகழ்வு என்று அறிந்து கொண்ட அவர் சொன்னாராம் ‘ அவர் வந்து என்ன ஒரு குடம் தண்ணி ஊற்றப் போகிறாரா?

சுஜாதா என்கிற ரங்கராஜன் நல்ல உயரம். அவரை நான் பார்த்த போதெல்லாம் அவர் கூன் போட்டே நடந்து கொண்டிருந்தார். நடுவயதிலேயே அவரை சர்க்கரை நோய் தாக்கி விட்டது. அதில் அவர் பெரும் சிரமம் அடைந்தார்.

அவரது மாமா விஜயம் நாடகத்தை குறும்படமாக தயாரித்து குறுந்தகடாக வெளியிட்ட நிகழ்வுக்கு நான் போயிருந்தேன். வெளியிட்டவர் என் உறவினர் என்பதால் முதல் வரிசையில் எனக்கு இடம். வந்திருந்தவர்களுக்கு குலோப்ஜாமூன் இரண்டு, ஜீராவுடன் தந்திருந்தார்கள். காரத்திற்கு மைசூர் போண்டா, தேங்காய் சட்னி.. இரண்டும் சுஜாதாவிற்கு தடா.

இலக்கிய உலகில் சுஜாதாவின் வாரிசு யார்?
சுஜாதாவே ஒருமுறை சொல்லியிருக்கிறார் இருவரைப் பற்றி.

http://www.eramurukan.in/into.jpg

ஒருவர் இரா.முருகன். சுஜாதா மறைவுக்குப் பின் கமலஹாசன் சுஜாதா மீதிருந்த மரியாதையாலும் அன்பாலும் முருகனை என்னைப்போல் ஒருவன் படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அவர் பைனரி போன்ற அடிப்படை கணித/ கணினி சொற்களைப் பயன்படுத்தி ரசிகனுக்கு அந்நியமாகிவிட்டார்.

இன்னொருவர் ரஞ்சன். அவர் யாரென்றே தெரியவில்லை. இதுவரை என் கண்ணில் படவில்லை. அவர் படைப்புகளும் தான்.

வா.மு. கோமு ஒரு முறை எனக்கு எழுதிய கடிதத்தில் : ‘நீங்கள் சுஜாதாவின் பயிற்சி பட்டறை எதிலாவது கலந்து கொண்டீர்களா?’ என்று கேட்டிருந்தார். சுஜாதாவும் என் எழுத்துப் பயிருக்கு நீர் வார்த்திருக்கலாம் சிறிதளவேனும்.

–நன்றி திண்ணை 

21- கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்


ங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தை அல்லது தூரத்து உறவுக்காரரின் குழந்தையைப் பார்க்கிறீர்கள். அந்தக் குழந்தையின் பெயர் தெரியாது உங்களுக்கு. அப்போது, அந்தக் குழந்தையை… ‘ராமா, வாடா’ என்று அழைப்பீர்களா? ‘வாமனா இங்கே வா, சாக்லேட் தரேன்’ என்று சொல்வீர்களா? ‘நரசிம்மா, பக்கத்துல வந்தேன்னா, ஒரு கதை சொல்லுவேன்’ என்று அழைப்பீர்களா?

எல்லாமே பகவானின் திருநாமங்கள்தான்; திருமாலின் பெயர்கள்தான். ஆனால், ‘கண்ணா, இங்கே வாடா!’ என்றுதான் கூப்பிடுவோம். கண்ணனின் திருநாமத்துக்கு மட்டுமேயான பெருமை அது!

கண்ணன் என்பவன் அழகானவன். அனைவரையும் ஈர்ப்பவன். அந்த அழகை, ‘கஸ்தூரி திலகம் லலாட படலே…’ எனும் ஸ்லோகம் அழகுற விவரிக்கிறது.

ஒருவரைப் பார்க்கிறபோது, முதலில் அவர் முகம் பார்ப்போம். அப்படிப் பார்க்கிற வேளையில், சட்டெனத் தட்டுப்படுவது அவரின் நெற்றிதான். அந்த நெற்றி நிர்மலமாக, ஒன்றுமில்லாததாக இருந்தால் நன்றாகவா இருக்கும்?! நெற்றியில் விபூதியோ, கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீசூர்ணத்துடன்) … அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக் கொள்ளவேண்டும்.

நெற்றியில் (ஸ்ரீசூர்ணத்துடன்) திருமண் வைத்திருப்பதற்கு உங்களையும் என்னையும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சாட்ஷாத் ஸ்ரீகண்ணனையே எடுத்துக் கொள்வோம். அவனே எப்போதும் திருமண் (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொண்டுதான் காட்சி தருகிறான்.

திருமண் என்பது, பகவானின் திருவடி. அவனுடைய திருவடியை நாம் நம் சிரசில், நெற்றியில் சூடிக் கொள்வதாக ஐதீகம். ஆனால், பகவானே தன் நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டிருக்கிறானே?! அது எவருடைய திருவடி?

சீதாதேவிக்கும் ஸ்ரீராமபிரானுக்கும் பங்குனி மாத உத்திர நட்சத்திர நன்னாளில் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் 364 நாளும் இல்லாத ஒரு விஷயம், பங்குனி உத்திர நாளில் நடைபெறும். அந்த நாளில், ஏக சிம்மாசனத்தில் அதாவது ஒரே சிம்மாசனத்தில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். அதுமட்டுமா? பெருமாள் எப்போதுமே தெற்கு வாசல், பிராட்டி எப்போதுமே வடக்கு வாசல் என்று இருக்கிற ஸ்ரீரங்கத்தில், அன்றைய நாளில், தாயார் சந்நிதிக்கு வந்து எழுந்தருள்வார் பெருமாள்.

திருமணமாகி பெண்கள் புகுந்த வீட்டுக்குச் செல்கிறார்களோ இல்லையோ, வேட்டகத்துக்கு அதாவது பெண்ணின் வீட்டுக்கு, மாப்பிள்ளை நிச்சயம் செல்வார் அல்லவா?! அதன் பிறகுதான் பெண்ணை அழைத்துக்கொண்டு புகுந்த வீட்டுக்குச் செல்வார்கள். அதேபோல், தாயாரின் சந்நிதிக்கு வருவாராம் பெருமாள்!

சரி… திருமண் விஷயத்துக்கு வருவோம்.

கம்ப ராமாயணத்தில், சீதா கல்யாணத்தின்போது, ஸ்ரீராமபிரானை விவரிக்கிற வேளையில், ‘தன் திருநாமத்தை தானே சார்த்தி…’ எனப் போற்றுகிறார் கம்பச்சக்கரவர்த்தி.

எதற்காக அவரே திருமண் இட்டுக் கொண்டாராம்?!

வைஷ்ணவ அடியவர்கள் அனைவரும் திருமண் (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொள்கிறார்களே, நாமும் இட்டுக்கொண்டு பார்ப்போமே என விரும்பினாராம் பகவான். ‘கற்கண்டு சாப்பிட்டேன். எவ்வளவு சுவையாக, பிரமாதமாக இருக்கிறது தெரியுமா?’ என்று ஒருவர் சொன்னால் போதுமா? கற்கண்டின் சுவை குறித்து காதாரக் கேட்டாலோ, அல்லது பேப்பரில் எழுதியிருப்பதைப் படித்தாலோ அந்தச் சுவையை உணர்ந்துவிட முடியுமா? இரண்டு கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால்தானே, அதன் சுவையை நம்மால் அறிய முடியும்?! அதனால், அடியவர்கள் திருமண் இட்டுக் கொள்வதால் கிடைக்கிற சுகானுபவத்தைத் தானும் அனுபவிக்க ஆவல் கொண்டார் பகவான். தவிர, திருமண் இட்டுக் கொள்ளுங்கள்; வெறும் நெற்றியாக இருக்காதீர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவும் அவர்  திருமண் இட்டுக்கொண்டு காட்சியளித்தார்.

பகவானின் திருநாமங்களைச் சொல்வதும், (ஸ்ரீசூர்ணத்துடன்)  திருமண் இட்டுக் கொண்டு அவனை ஸேவிப்பதும் மிகுந்த பலனைத் தரக்கூடியவை.

நம்மில் சிலர், ‘விபூதி, கோபி சந்தனம், திருமண் போன்றவற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு வெளிவேஷம் போடமாட்டேன்’ என்பார்கள். இன்னும் சிலர், ‘கோயிலுக்குப் போய் ஸ்வாமி கும்பிடுவதில்லை’ என்பார்கள்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்… சுக்கிராச்சார்யர், வால்மீகி, வேதவியாசர் எனப் பெருமக்கள் அனைவரும் (ஸ்ரீசூர்ணத்துடன்) திருமண் இட்டுக் கொண்டார்கள்; ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். அவனின் பேரருளையும் பெற்றார்கள்.

நம் வீடுதான். என்றாலும் குளிக்கிற இடத்தில் சமைக்கிறோமா, என்ன? சமைக்கிற இடத்திலா படுத்துக்கொள்கிறோம்? அல்லது, வரவேற்பறையின் நடுவே நின்றுகொண்டு குளிக்கிறோமா? குளியலறையில் சமைத்தால், பருப்பும் அரிசியும் வேகாதா? வரவேற்பறையில் குளித்தால், நம் அழுக்கு போகாதா? சமையலறையில் துண்டை விரித்துக்கொண்டு படுத்துத் தூங்கினால், தூக்கம் வராமலா போய்விடும்?! ஆனால், அந்தந்த விஷயத்துக்கு என்று ஒதுக்கி வைத்து, அதன்படி செயல்படுவதுதானே முறை! கோயில்களும் அப்படித்தான். பகவானை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒன்றி, அவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டு வணங்கி வழிபடுவதற்குக் கோயில்களே சிறந்த இடம். அப்படிப்பட்ட சூழலுடன் கோயில்களை நிர்மாணித்ததே, வழிபடுவதற்காகத்தான்.

உருவமாகவும் உருவமில்லாதவனாகவும் இருப்பவன் இறைவன். ஆனால், நாம் வழிபடுவதற்கு, விக்கிரகத் திருமேனி என்பது மிகவும் அவசியமாகிறது.

அந்த விக்கிரகத் திருமேனிக்கு முன்னே நின்று கொண்டு, ‘நாராயணா… நாராயணா… நாராயணா’ என்று சொல்லியோ, ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ என்று ஜபித்தோ வேண்டி நில்லுங்கள். வேறு எதுவும் நீங்கள் கேட்க வேண்டாம். உங்களுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்பது பகவானுக்குத் தெரியும்?!

ஆகவே, காலையில் நீராடி, பூஜையறையில் நின்று விபூதியோ குங்குமமோ, சந்தனமோ கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொண்டு, இறைவனை முழுவதுமாகச் சரணடையுங்கள். நெற்றியில் உள்ள அந்தத் திருச்சின்னம், உங்கள் ஒவ்வொரு நாளிலும் பொழுதிலும் உங்களுக்குத் துணை நின்று உங்களைக் காப்பாற்றும். எந்தவொரு தவறான பாதைக்கும் செல்லாமல், உங்களை வழிநடத்தும்!

திருமண் என்பது திருச்சின்னம் மட்டுமல்ல; அது பகவானின் திருவடி. பகவானின் திருவடியை திருச்சின்னமாகக் கொண்டுவிட்டால், தவறான பாதையில் நீங்கள் திசை மாறவே முடியாது!

ஸ்ரீகிருஷ்ணருக்கு ‘ஏகஹ… ந ஏகஹ’ என்றொரு திருநாமம் உண்டு. அவன், ஒருவனாகவும் இருப்பவன்; ஒருவன் அல்லாதவனாகவும் அதாவது எதுவும் அற்ற நிலையிலும் இருந்து அருள்பவன்!

அவன் திருவடியை திருமண்ணாக இட்டுக் கொள்ளுங்கள். உங்களை நல்ல வழிக்கு இட்டுச் செல்வது அவன் பொறுப்பு!

–நன்றி சக்தி விகடன்

இதன் முந்தைய பகுதிகள்:

33- சன்யாசம் – சோ

இதன் முந்தைய பகுதி…

http://im.in.com/connect/images/profile/b_profile1/Cho_Ramaswamy_300.jpg

எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள்

கேள்வி : ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள்; சன்யாஸி ஆவதற்கு சடங்கு எதுவும் கிடையாதா? அவரவர் நினைத்தால், அடுத்த நிமிடம் காவி உடை அணிந்து, தன்னை ‘சன்யாஸி’ என்று சொல்லிக் கொள்ளலாமா?

சோ : காவி உடை கூட அணிய வேண்டிய அவசியம் இல்லை. எத்தனையோ பேர் காவி உடை அணியாமலே, தங்களை ‘சன்யாஸி’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லையா?

கேள்வி : அப்படியானால் சன்யாஸம் என்பது இவ்வளவுதானா?

சோ : இன்றைய நடைமுறையைச் சொன்னேனே தவிர, அதுதான் விதிமுறை என்று சொல்லவில்லை. ஒருவர் சன்யாஸம் பெறுவது என்றால், அவருக்கு சன்யாஸம் அளிக்கிற குரு ஒருவர் வேண்டும். வீட்டில் கோபித்துக் கொண்டு போய் ‘நான் சன்யாஸி’ என்று சொல்லிக் கொண்டால், அது சன்யாஸம் ஆகாது.

பெற்றோர் இருந்தால் அவர்களுடைய அனுமதியைப் பெற்று, குருவை அடைந்து, குரு முகமாகப் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். ஹோமம் எல்லாம் உண்டு. சன்யாஸம் அடைவதற்காக மந்திரங்கள் உண்டு. அவற்றை ஓத வேண்டும். இந்த மந்திரங்களில், முக்கியமாக ‘ப்ரைஷ’ மந்திரம் என்று ஒன்று உண்டு. ‘என்னால் எந்த ஜீவராசிக்கும் பயம் ஏற்படக் கூடாது’ என்ற பொருள் உடைய அந்த மந்த்ரம், சன்யாஸியின் விரதம் ஆகிறது.

மனிதர்கள் மட்டுமல்லாமல் செடி, கொடி, பிராணிகள், பூச்சிகள் உட்பட, எந்த ஜீவராசிக்கும் சன்யாஸியைப்பார்த்தால் ஒரு அச்ச உணர்வும் ஏற்படக் கூடாது. அஹிம்சையின் உச்ச நிலை இது.

நான் சொன்ன மாதிரி, ஹோமம் எல்லாம் செய்து, குரு முகமாக சன்யாஸம் பெறுவது ‘க்ரம சன்யாஸம்’. ஆனால், சில நேரங்களில், அல்லது இடங்களில், அது இயலாமல் போகலாம். அப்போது ‘ஆதுர சன்யாஸம்’ மேற்கொள்ளப்படும். சடங்குகளைச் சுருக்கமாகச் செய்து முடித்து, துறவு ஏற்றுக் கொள்ளப்படுகிற சன்யாஸம்.அதிஆதுர – அதாவது, ‘அத்யாதுர – சன்யாஸம்’ என்பதும் உண்டு. ‘ஆபத் சன்யாஸம்’ என்று கூறுகிறார்களே அதைப் போலத்தான் இது. ஆதிசங்கரர் சன்யாஸம் மேற்கொண்டது இவ்விதம்தான். இதிலும் கூட, ப்ரைஷ மந்திரம் சொல்லப்பட வேண்டும். அதாவது, தன்னால் எந்த ஜீவராசிக்கும் அச்சம் உண்டாகாது என்கிற விரதம் அவ்வளவு முக்கியம்.ஆதிசங்கரர் சன்யாஸம் பெறுவதற்கு அவர் தாய் அனுமதிக்கவில்லை. அவர் ஆற்றில் குளித்தபோது, ஒரு முதலை அவர் காலைப் பிடித்தது. தாய் கதறினாள். ‘தாயே! நான் சன்யாஸம் பெறுவதற்கு, இப்போது நீங்கள் அனுமதித்தால், அது எனக்கு மறுபிறவியாகும். ஆகையால், இப்பிறவியில் ஏற்பட்ட இந்தச் சோதனை, இப்படியே முடிவு பெறும்’ என்று கூறினார். தாயும் வேறு வழியின்றி அனுமதி அளிக்க, அந்தச் சிறுவயதிலேயே சங்கரர் சன்யாஸம் பெற்றார். அந்த முதலை ஒரு கந்தர்வன். துர்வாஸரை அவமதித்ததால், அவருடைய சாபத்தினால் அவன் முதலையானான்.

பரமசிவன் காலை நீ பிடிக்கிறபோது, உனக்குப் பழைய நிலை கிட்டும்’ என்று துர்வாஸர் கூறியிருந்தார். அதற்கு அவன் ‘முதலையாக இருக்கிறபோது, நான் எப்படி சிவனைப் பார்ப்பது?’ என்று பரிதாபமாகக் கேட்டான்.

சிவனே வந்து உன்னை சந்திப்பார்’ என்று கூறி அருளினார் துர்வாஸர். ஆதிசங்கரர், பரமசிவனின் அம்சம் கொண்ட அவதாரம். அதனால்தான், அவர் காலைப் பிடித்து, தன் பழைய நிலையை அந்த கந்தர்வன் பெற்றான்.

எல்லாவற்றையும் துறந்து, ஜீவராசிகளிடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்காமல், ஓரிடத்திலேயே தங்காமல், பரமனை நாடுகிற பக்குவம் பெற்று, ஞான நிலையை எய்துபவர்கள் சன்யாஸிகள்.

– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

சுஜாதா – கமல் முதலாவது சந்திப்பு! – அமுதவன்

My Photo

நடிகர் கமலஹாசனை அவருடைய மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பின் சமயத்திலிருந்து அறிமுகம். குடிசை படத்தின் இயக்குநர் நண்பர் ஜெயபாரதி மூலம் பழக்கம். கமல் அந்த நாட்களிலிருந்தே இலக்கியம், விஞ்ஞானம், திரைப்படம், செக்ஸ், அரசியல் என்று எல்லா விஷயங்களும் பேசுவார். அவருடைய பொதுஅறிவு வியக்கவைப்பதாக இருக்கும். பெங்களூரில் முதன்முறையாக அவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிய பேச்சு வந்தது. “அமுதவன் அவரைச் சந்திக்கவேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். என்னைக் கூட்டிப்போகிறீர்களா?” என்று கேட்டார்.

“வாருங்கள் இப்போதே போவோம்” என்றேன்.

மைசூர் பக்கம் படப்பிடிப்பிற்குப் போவதற்காக பெங்களூர் வந்திருந்தார் கமல். படப்பிடிப்பு நிர்வாகிகளிடம் கேட்டதற்கு உடனடியாக மைசூர் கிளம்பவேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் “எப்படியும் அடுத்தமுறை சந்தித்துவிடுவோம். அவரிடம் சொல்லிவைத்திருங்கள்” என்றார். சரியென்று சொல்லியிருந்தேன்.

அடுத்தமுறை திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தபோது நான் சென்னை வந்திருக்கும் செய்தி தெரிந்து நண்பர் எம்.எஸ்.பெருமாள் மூலம் தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அதன்படி கமலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தேன்.

அது எமர்ஜென்சி நேரம். இந்திரா காந்தியின் இருபது அம்சத்திட்டத்தை அப்போது முன்னணியிலிருந்த எல்லாக் கலைஞர்களும் பாராட்டிப் பேசுவது போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு கமல் முறை. அவருக்குத் தரப்பட்டிருந்த நிகழ்ச்சியை செய்துமுடித்துவிட்டு வந்தவர் “காரில் ஏறுங்கள். நமக்கு முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகள் இருக்கின்றன” என்றார்.

“என்ன?” என்றேன்.

“ஒன்று, இப்போது படப்பிடிப்புத் தளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். ஜெமினி கணேசன் டைரக்ட் செய்யும் ‘லலிதா’ படத்தின் ஷூட்டிங். ஒரேயொரு காட்சி. அரை மணி நேரத்தில் முடிந்துவிடும். அங்கிருந்து வீட்டிற்குப் போகிறோம். வீட்டிலிருந்து ஏர்போர்ட். உங்களுக்கும் டிக்கெட் போடச்சொல்லிவிடுகிறேன். இருவரும் உங்க ஊருக்கு அதான் பெங்களூருக்குப் போறோம். அங்கே கிரிஷ்கர்னாடையும், பி.வி. காரந்த்தையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதுவும் எப்படியும் அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு நான் ஃப்ரீதான். நேரே சுஜாதா வீட்டிற்குப் போய்விடுவோம். அவரை எப்படியும் இன்றைக்கு இரவே சந்தித்துவிடலாம். நாளைக் காலை முதல் விமானம் பிடித்து சென்னை வந்துவிடுவோம். நீங்கள் கலந்துகொள்ளும் திருமணத்தில் நாளைக் கலந்துகொள்ளலாம்” என்றார்.

கமலின் வேகமும் அவருடைய ஆர்வமும் மிகவும் பிடித்து இருந்தபோதிலும் என்னால் அவருடைய திட்டத்திற்கு உடன்பட முடியவில்லை. காரணம் நான் சென்னை வந்திருந்தது நண்பர் கண்ணனுடைய திருமணத்தில் கலந்துகொள்வதற்காக. கண்ணன் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகன். எனக்குச் சென்னையில் ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தந்ததே கண்ணன்தான். அவர் திருமணத்தின்போது முழுவதும் அவர் கூடவே இருப்பதற்காக வந்திருக்கிறேன். அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். இப்போது திடீரென்று காணாமல் போய்விட்டு நாளைக்காலை தாலி கட்டும் நேரத்திற்குத் திரும்பிவந்தால் நன்றாயிருக்காது என்று காரணம் சொல்லி மறுத்தேன். ஓரளவு வற்புறுத்திய கமல் என்னுடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். “சரி இந்த முறையும் சுஜாதாவைச் சந்திக்கமுடியாமல் போகிறது. அடுத்தமுறை எப்படியும் சந்தித்துவிடுவோம்” என்றார். அவருடைய முகத்தில் லேசாக ஏமாற்றம் படிந்திருந்ததை உணரமுடிந்தது. ஆனாலும் விமானநிலையம் செல்லும் அவசரத்திலும் என்னை நான் இறங்கவேண்டிய திருமண மண்டபத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போனார்.

கொஞ்ச நாட்கள் சென்றிருக்கும். அப்போதெல்லாம் இப்போதுபோல் தொலைபேசி வசதிகள் பரவலாக இல்லாமலிருந்த நேரம். நான் பணிபுரிந்துகொண்டிருந்த தொலைபேசித்தொழிற்சாலையின் அலுவலகத்திற்குச் சென்னையிலிருந்து தொலைபேசி வந்திருந்தது. கமலுடைய அப்போதைய செயலாளர் சேஷாத்ரி என்பவர் பேசினார். “ஒரு நிமிடம்….. கமல் பேசுவார்” என்றார். மறுநொடி கமல் போனில் வந்தார். “அமுதவன் வர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை வரமுடியுமா?”என்றார்.

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்றேன்.

“ஒண்ணுமில்லை உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அன்றைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு தேவநேயப்பாவாணர் அரங்கத்துல ‘தமிழின் பதினொன்று சிறுகதைகள்’ அப்படின்னு ஒரு புத்தக வெளியீட்டு விழா இருக்கு. பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ,மாலன் இவங்கல்லாம் சேர்ந்து எழுதின சிறுகதைகள் வெளியீட்டு விழா. அந்த விழாவில் எம்.பி.சீனிவாசன், பாலுமகேந்திரா கலந்துக்கறாங்க. நான் கலந்துக்கறேன். முக்கியமான விஷயம் என்னன்னா புத்தகத்தை வெளியிடறவர் சுஜாதா. அதனால சுஜாதாவை சந்திக்கிறதுக்கான சந்தர்ப்பம் தானாகவே வந்திருக்கு. அவரை பொதுமேடையில் வைச்சு முதன்முதலாக சந்திக்கிறதை நான் விரும்பலை. அங்கே போவதற்கு முன்பே அவருடைய அறிமுகம் இருக்கணும்னு விரும்பறேன். அதனால நீங்க என்ன செய்யறீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை அவரோடெயே நீங்களும் சென்னைக்கு வந்துர்றீங்க. ஒரு பத்துமணி அல்லது பதினோருமணி அளவுக்கு அவரைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா மதியம் இங்கேயே லஞ்ச் முடிச்சுப்போம். பிறகு மாலை புரோகிராம் அட்டெண்ட் பண்ண வசதியாக இருக்கும். அவரோட பேசிட்டு ஏற்பாடு பண்ணிடுங்க”என்றார்.

“சரி..அப்படியே செய்திருவோம்” என்றேன்.

சுஜாதாவிடம் சொன்னதற்கு “ஆமாய்யா இன்விடேஷன்ல கமலோட பேரும் இருந்துச்சி. நீங்க ஏற்கெனவே கமல் பத்திச்சொல்லியிருக்கீங்களே அதனால அங்கேயே மேடையிலேயே சந்திக்கலாம்னு இருந்தேன். இப்ப நீங்களும் சென்னைக்கு வர்றதாயிருந்தா வாங்க ரெண்டுபேரும் போய்வந்துருவோம்” என்றார்.

மறுநாள் சுஜாதா போன் செய்து “அப்புறம் ஒரு சின்ன திருத்தம். மத்தியானம் லஞ்சுக்கு வரமுடியாது. பகல் உணவுக்கு கல்கி ராஜேந்திரன் கூப்பிட்டிருக்கார். தொடர்கதை எழுதறது சம்பந்தமா அவரோட பேச வேண்டியிருக்கு. அதனால அதுக்கு முன்னாடி வேணும்னா கமல் வீட்டுக்குப் போய் வந்துருவோம். பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்குக் கிளம்பிருவேன்னு சொல்லிடுங்க” என்றார்.

கமலுக்கு போன் செய்து சொன்னதற்கு “சரி, பத்து மணிக்கு அவரோட வந்துருங்க. அவர் சொன்னமாதிரியே ஒரு மணிக்கெல்லாம் அவர் கிளம்பிடலாம்” என்றார்.

நானும் சுஜாதாவும் சென்னை சென்று இறங்கினோம். நான் வழக்கம்போல் கண்ணன் வீட்டிற்கும் சுஜாதா மயிலாப்பூரிலிருந்த அவரது மாமனார் வீட்டிற்கும் சென்று தங்கினோம். “கமலிடம் பேசிவிட்டுச் சொல்லுங்க. எங்கே வரணுமோ நான் வந்துர்றேன்” என்று சொல்லிச் சென்றிருந்தார் சுஜாதா.

காலை எட்டுமணி அளவில் நாங்கள் சென்னை வந்துவிட்ட செய்தியைக் கமலிடம் சொல்லியபோது அவர் குரலில் வழக்கமாயிருந்த உற்சாகம் இல்லை. “வந்துட்டீங்களா.. சரி, அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்து போன் செய்யுங்களேன். அல்லது உங்க நம்பர் கொடுங்க நானே பேசறேன்” என்றார். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. என்னடா இது இத்தனை நாட்களும் இவ்வளவு ஆர்வமாக இருந்து நம்மை இங்கே இந்த நிகழ்வுக்காகவே வரச்சொல்லிவிட்டு இப்போது இப்படி சுரத்தில்லாமல் பதில் சொல்கிறாரே என்றிருந்தது. அவர் கேட்டபடியே நான் தங்கியிருந்த வீட்டு போன் நம்பரைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.

சொன்னபடியே சற்றுநேரம் கழித்து போன் செய்தார் கமல். “இல்லை ஒரு சின்ன சங்கடம். எனக்கு திடீரென்று ஷூட்டிங் வைத்துவிட்டார்கள். மலையாளப் படம். ஆக்சுவலி இன்றைக்கு எந்தப் படப்பிடிப்பும் இருக்கவில்லை. சுஜாதா சந்திப்பு என்பதற்கு மட்டுமே நேரம் ஒதுக்கி வைத்திருந்தேன். ஹீரோயின் கால்ஷீட் இன்றைக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஒரு பாடல் காட்சி..அதுவும் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன செய்தும் தவிர்க்க முடியாது. ஒன்று செய்யுங்களேன். சுஜாதாவை மகாபலிபுரம் கூட்டிவந்திருங்களேன். அங்கேயே சந்திப்பை வைத்துக்கொள்வோம்”என்றார்.

இதெல்லாம் சாத்தியமாகிற காரியம் இல்லை என்று தோன்றிற்று. “இல்லை, சுஜாதா அப்படியெல்லாம் வருவார் என்று தோன்றவில்லை. ஒன்று செய்வோம். மாலை கூட்டம் முடிந்ததும் வேண்டுமானால் நாம் எங்காவது சந்தித்துப் பேசுகிற மாதிரி வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அதுவும் எந்த அளவு சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் இரண்டு பேருமே ஒன்றாகத்தான் பெங்களூர் கிளம்புகிறோம். மெயிலில் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறோம்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் “அதுவும் சரிதான். அவரை சந்திக்கணும் என்று வரவழைத்துவிட்டு நான் எங்கோ போய்விட என்னைத்தேடி அவர் அலைகிற மாதிரி இருக்கக்கூடாது. சரி ஒன்று செய்வோம். நான் இப்ப காலையிலேயே ஷூட்டிங் போய் முடிந்தவரை என்னுடைய காட்சிகளை எடுக்கிறமாதிரி பார்த்துக்கொள்கிறேன். மற்ற காட்சிகளையும் ஹீரோயினையும் அவர்கள் தனியாப் படமெடுக்கும் அந்த இடைவேளையில் ஒரு அவசர வேலை என்று சொல்லி ஒரு மணிநேரம் பர்மிஷன் வாங்கி வந்திடறேன். சுஜாதாவைச் சந்தித்துவிட்டு மறுபடி சென்று ஷூட்டிங் கலந்துக்கறேன். நீங்கள் ஒரு பதினொன்றரை மணிக்கு சரியாக வீட்டுக்கு வந்துருங்க. நானும் கரெக்டாக பதினொன்றரைக்கு வீட்டுக்கு வந்துர்றேன்” என்றார்.

“நீங்கள் இதற்காக மகாபலிபுரத்திலிருந்து இத்தனை தூரம் வந்துவிட்டுத் திரும்பவும் மகாபலிபுரம்வரை போகவேண்டுமே” என்றேன்.

“என்ன செய்யறது சந்தர்ப்பம் அந்த மாதிரி…ஏதாவது சொல்லி பர்மிஷன் வாங்கி வரணும். இன்றைய தினத்தை மிஸ் பண்ண வேண்டாம். நான் எப்படியும் வந்துர்றேன். நீங்க அவரைக்கூட்டிட்டு வீட்டுக்கு வந்துருங்க” என்றார்.

கமல் அப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம். அவருடைய இந்த செய்கை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. இது சராசரி நடிகர்களுக்கு வரமுடியாத இலக்கிய தாகம். அப்போது மிக உச்சத்திலிருந்த எழுத்தாளர் சுஜாதா. அவரை ஒரு நடிகர் இப்படியெல்லாம் முயன்று பார்க்கத்துடிப்பார் என்பதே வியப்பை உண்டுபண்ணுகிற விஷயம்தான். ஆனால் கமல் ஒரு புதுமை விரும்பி. அவரைத் தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற எண்ணம் இருந்தபோதும் அதையும் தாண்டி ஆச்சரியமாகவே இருந்தது.

சுஜாதாவிடம் போன் செய்து விஷயம் சொல்லியபோது “யோவ் வருவாராய்யா? அப்புறம் அவர் பாட்டுக்கு வராமலிருந்துட்டார்னா என்னுடைய புரோகிராம் எல்லாம் வேஸ்ட்டாயிரும். எனக்கு சாவியை சந்திக்க வேண்டியிருக்கு. போன தடவை கூட அவரைப் பார்க்கலை. அதற்கே அவர் கோவிச்சுட்டார்” என்றார்.

“இல்லை நிச்சயம் வந்துருவார். உங்களை சந்திக்க அவர் ரொம்பவும் துடிச்சிட்டிருக்கார்” என்றேன்.

“சரி எல்டாம்ஸ் ரோட்டுல அந்தக் கார்னர் வீடு தானே? அதான் கமல் வீடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கே வந்துர்றேன். நீங்க அங்க வந்துருங்க. கொஞ்சம் வெளிலயே நில்லுங்க. நான் வந்துர்றேன்”என்றார்.

மிகச்சரியாக பதினொன்றே கால் மணிக்கெல்லாம் நானும் நண்பர் அகிலன் கண்ணனும் கமலஹாசன் வீட்டிற்குச் சென்றோம். கமல் வந்துவிட்டாரா என்று பார்ப்பதற்காக உள்ளே போனபோது வீட்டிற்குள் ஏதோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நல்ல வேளை கமல் இங்கேயே நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று பார்த்தால் இது கமல் நடிக்கும் படம்தான். ஆனால் இன்றைய படப்பிடிப்பில் கமல் இல்லை. கே.பாலச்சந்தரின் படம். கேபியும் அன்றைக்கு அங்கே இருக்கவில்லை. அவருக்கு பதிலாக அனந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவர்களிடம் சென்று கேட்டதற்கு கமல் மகாபலிபுரம் போயிருக்கிறார் என்றும் இப்போது வரக்கூடும் என்றும் சொன்னார்கள். சரிதான் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறதென்று தோன்ற காம்பவுண்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டோம்.

சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு ஆஸ்டின் கார் வந்தது. (ஆஸ்டினா மாரிஸ் மைனரா என்பது நினைவில்லை.)பழைய மாடல் கார். சுஜாதாதான் ஓட்டிவந்தார். ஏற்கெனவே அந்தக் காரைப்பற்றி அவர் சொல்லியிருந்ததாலும் பத்திரிகைகளிலும் எழுதியிருந்ததாலும் தூரத்திலிருக்கும்போதே கண்டுபிடிக்க முடிந்தது. சுஜாதாவும் எங்களைப் பார்த்து சைகை செய்தார். எங்களருகில் வந்ததும் கார் நின்றது. “என்னய்யா கமல் வந்துட்டாரா?” என்றார் சுஜாதா.

“இல்லை வந்துருவார் என்று சொன்னார்கள். வாங்க உள்ளே போயிருவோம்” என்றேன்.

“காம்பவுண்டுக்குள்ள காரை நிறுத்தலாம் இல்லை?”

“ஓ…தாராளமாய் நிறுத்தலாம். ரொம்பப் பெரிய காம்பவுண்ட்” என்றேன்.

சுஜாதா காரைக் கிளப்பினார்.

கார் நகரவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. கார் நகர மாட்டேன் என்றது.

“எப்பவாச்சும் இப்படி ஆயிரும். மாமனாருடையது. மாமனார் யாரையும் தொடவிட மாட்டார். எனக்கு மட்டும்தான் அனுமதி. நல்ல கண்டிஷன்லதான் இருக்கு. ஆனா எப்போதாவது மக்கர் பண்ணும். இப்பப்பார்த்து…….” என்று சொல்லிக்கொண்டே இன்னமும் ஏதேதோ செய்தார்.

கொஞ்சம் குலுங்கி அதிர்ந்து நிறைய புகை விட்டுவிட்டு அமைதியானதே தவிர கிளம்பவில்லை.

மொத்தமாக அணைத்து திரும்பவும் ஆன் செய்து இக்னிஷனைப் போட்டு கியரை மாற்றி எந்த சாகசம் செய்தபோதும் அந்தக் கார் பிடிவாதமாய் மறுத்துவிட்டது.

ஒரு சங்கடச் சிரிப்புடன் “மெல்க்யூ கொஞ்சம் தள்ளுறீங்களா” என்று கேட்டார் சுஜாதா. அவர் எப்போதும் என்னுடைய இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்.

சரியென்று சொல்லி நானும் கண்ணனும் காரின் பின்புறம் வந்து காரைத் தள்ள ஆரம்பித்தோம். ஒரு முப்பது அடி தூரம் தள்ளினால் கேட் வந்துவிடும். கேட்டிற்குள் நுழைய வேண்டும்.

தள்ளினவுடன் ஸ்டார்ட் ஆகும் என்று பார்த்தால் ஆகவில்லை. முழுவதும் தள்ளிக்கொண்டுதான் போகவேண்டும் போலிருந்தது. எங்களுடைய புஜபலம் அவ்வளவாகப் போதவில்லை போலிருக்கிறது. எவ்வளவு தள்ளியும் அங்குலம் அங்குலமாகத்தான் கார் நகர்ந்தது.

இதோ ஆயிற்று. இன்னமும் ஒரு ஐந்தடி தள்ளினால் கேட் வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டே தள்ள, சர்ர்ர்ரென்று பின்புறம் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க கண் இமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தார் கமல்.

எங்களுக்கு நடுவில் வந்தவர் சட்டென்று காரைப்பிடித்துத் தள்ள ஆரம்பிக்க திடீர் வேகத்தில் சரசரவென்று நகர்ந்தது கார்.!

காருக்கு திடீரென்று வேகம் வந்தவுடன் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த சுஜாதா கமல் காரைத் தள்ளிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தவுடன் பதறிவிட்டார். “கமல் நீங்க…..நீங்க….வேணாம் விட்டுருங்க”என்று ஏதேதோ சொல்லவந்தவரை-

“சார் பிரேக்கை கீக்கைப் பிடிச்சுரப் போறீங்க. காரு நின்னுருச்சின்னா அப்புறம் தொந்தரவாயிரும் பேசாம வாங்க” என்று வந்ததும் ஜோக் அடித்தார் கமல்.

நல்லவேளையாக கார் நிறுத்துமிடம் உடனடியாக வந்தது. காரிலிருந்து இறங்கிய சுஜாதா “சாரி கமல்..நீங்க வந்து” என்று திணற-

“நோ……இட்ஸ் எ ப்ளஷர்” என்று கைகுலுக்கினார் கமல். “ஒரு பிரபல எழுத்தாளரின் காரைத் தள்ளுகின்ற பாக்கியம் எந்த நடிகனுக்குக் கிடைக்கும்? எனக்குக் கிடைச்சிருக்கு” என்ற கமல் அப்போதே ஏதோ நெடுநாள் பழகியவரிடம் பேசுவதைப் போல மிக இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

எல்லோரும் கமலுடைய அறைக்குள் சென்றோம்.

கமலுடைய அறையைப் பார்த்ததும் எல்லாருக்கும் அதிர்ச்சி; வியப்பு! அத்தனை சாதாரணமாக இருந்தது அறை. வெள்ளை விரிப்பு மெத்தையுடன் கூடிய சின்னதொரு கட்டில், தண்ணீர் பானை, நிறைய புத்தகங்கள், சுவரில் மைக்கேல் ஜாக்சன் படம் என்று மிக எளிமையாக இருந்த அறையைப் பார்த்து வியப்பு.

கட்டிலின் தலைமாட்டில் மாட்டப்பட்டிருந்த ‘அலங்காரப்பொருளைப்’பார்த்து அதிர்ச்சி. “என்னய்யா இது இதை எதுக்கு வச்சிருக்கீங்க?” என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சுஜாதா.

“சும்மாதான் ஒரு வித்தியாசத்துக்கு இருக்கட்டுமேன்னு வெச்சிருக்கேன்” என்றார் கமல்.

காரணம் கமலின் கட்டிலின் தலைமாட்டில் இருந்தது ஒரு மண்டை ஓடு. நிஜ மனிதனின் மண்டை ஓடு! மிகவும் சிரமப்பட்டு எங்கோ ஒரு சுடுகாட்டில் இருந்து வாங்கிவந்து மாட்டி வைத்திருந்தாராம்.

பின்னர் இருவருக்குமிடையிலான பேச்சு மிகவும் சுவாரசியமாய் அமைந்திருந்தது. வீட்டிற்குள் சென்று தன்னுடைய அண்ணன் சாருஹாசனையும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த அனந்துவையும் கூட்டிவந்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் கமல்.

அன்று அப்படி ஆரம்பித்த கமல் – சுஜாதா நட்பு சுஜாதாவின் இறுதிக்காலம்வரை மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ‘விக்ரம்‘ படம் ஆரம்பித்து நிறைய படங்களில் இருவரும் இணைந்திருந்தது மட்டுமல்லாமல் கமல் முதன் முதலாகத் தம்முடைய வீட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியபோது சுஜாதாவைக் கூப்பிட்டுத்தான் பொருத்தித் தரச்சொன்னார் என்பதுவரை மிக நெருக்கம்.

அன்றைக்குப் பேசிக்கொண்டிருந்து விடை பெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பிய கமல் “சார் நானும் கூடவே வரட்டுமா?” என்றார்.

“இல்லை நீங்க ஷூட்டிங் போகணுமில்லையா?” என்று கேட்ட சுஜாதாவிடம்-

“இல்லை வழியில கார் நின்னுருச்சின்னா தள்ளணுமில்ல” என்று கமல் கேட்டது கமலின் அக்மார்க் குறும்பு!

My Photo

சொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். ‘பிலிமாலயா‘ இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய ‘கங்கையெல்லாம் கோலமிட்டு’ தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த ‘விபத்து‘ குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு ‘ரெய்கி‘ சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள்! ரெய்கி பற்றி ‘அற்புத ரெய்கி‘ (‘நலம்‘-கிழக்குப் பதிப்பக வெளியீடு) ‘சர்க்கரை நோய் – பயம் வேண்டாம்‘ (விகடன் பிரசுரம்) இரண்டும் சமீபத்தில் எழுதிய நூல்கள்.

தொடர்புடைய பதிவு:

கமல்-சுஜாதாவின் முதல் சந்திப்பு பற்றி அமுதவன்…

2- கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – - விஸ்வாமித்ரா

முந்தைய பதிவின் தொடர்ச்சி…

ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப் பட்ட கொடுமையை யூதர்கள் மறக்கவேயில்லை தங்கள் சந்ததியினருக்கு ஏராளமான சினிமாக்கள், டிராமாக்கள், ஆவணங்கள், மியூசியங்கள், புத்தகங்கள், நாவல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் மீண்டும் மிக அழுத்தமாக நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்கால யூதச் சந்ததியினர் தங்கள் முன்னோர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை மறந்து போனால் அவற்றை அலட்சியமாக நினைத்துத் தங்களை எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அதே கொடுமை நாளைக்கு அவர்களுக்கும் நிகழலாம் என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் யூதர்கள். வரலாற்றை மறப்பவர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்வார்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள்.

இஸ்ரேல் உருவான பிறகு அதனது விளையாட்டு வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகளை விரட்டிச் சென்று அவர்கள் உலகின் எந்த மூலையில் எந்தப் பொந்தில் பதுங்கி இருந்தாலும் தேடிச் சென்று தன் வீரர்களுக்கு நீதி வழங்கிய துணிவான நாடு இஸ்ரேல். ஜெர்மனியின் ஹிட்லரின் கோர விளையாட்டுக்குக் கொடூரமாகப் பலியான கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்களின் படுகொலைக்குக் காரணமாக அரக்கர்களை அந்தப் படுகொலைகள் நடந்து, உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னாலும் கூடத் தொடர்ந்து தேடிச் சென்று அவர்களைப் பிடித்துத் தண்டித்து இறந்த உயிர்களுக்குப் பதில் சொன்ன ஒரு நாடு இஸ்ரேல்.

அப்படி ஒரு நாஜி போர்க்குற்றவாளியை, அவன் அர்ஜென்டினாவில் ஒளிந்திருக்கும் இடத்திற்கே சென்று, அர்ஜென்டினா அரசின் உதவியின்றியே அவனை இஸ்ரேலுக்குக் கடத்தி வந்து நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த கதையே தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் திரைப்படம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து சில சுவாரசியமான காட்சிகள், படமாக்கப் பட்ட விதம் குறித்து பார்ப்போம்.

இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருந்த படமாக இருந்தாலும் கூட, நாஜி போர்க்குற்றவாளி ஐக்மேனைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவனை தந்திரமாக இஸ்ரேல் விமானத்தில் கடத்திக் கொண்டு வருவதும் மிகப் பிரமாதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஐக்மேனை ரகசிய இடத்தில் வைத்து மொசாட் ஏஜெண்டுகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணை செய்யும் ஏஜெண்டான மைக்கேல் ஒருவர் மட்டுமே ஆய்ஸ்விச் நகரத்தில் இந்த ஐக்மான் யூதர்களைக் கொல்வதற்கான பணியில் இருந்ததை நேரடியாகப் பார்த்த சாட்சி. அவரிடமே அவனைக் கடத்தி விசாரிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தனது இளம் சகோதரனை அந்தப் படுகொலையில் இழந்த மைக்கேல் மிகுந்த மன உளைச்சலுடன் ஐக்மானிடம் விசாரணை நடத்த நேருகிறது. ஒரு உயிரையாவது ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவேயில்லையா என்று கேட்கிறார்.

அடால்ஃப் ஐக்மான் எந்தவித உணர்ச்சியிமில்லாத ஒரு மிருகம் போலப் பதில் சொல்கிறான். விசாரணை செய்யும் பொழுது அவன் இரக்கமேயில்லாமல் தன் பங்களிப்பை விவரிக்கிறான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் ஏஜெண்ட் அவனுக்கு முகத்தில் ஷேவ் செய்து கொண்டிருக்கிறாள். கத்தியால் ஒரே வெட்டு வெட்டியிருக்க முடியும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு பாதியில் வெளியேறுகிறாள். விசாரணை செய்யும் ஏஜெண்ட் கை விலங்கால் அவனை கழுத்தை நெரித்துக் கொல்ல நினைக்கிறான், உணவில் விஷம் கலந்து கொல்ல நினைக்கிறார்கள், நிச்சயம் அர்ஜெண்டினா அரசு அவனைத் தப்பிக்க வைத்து விடும் அதற்குப் பதிலாகக் கொன்று விடலாம் என்று ஏஜெண்டுகள் நினைக்கிறார்கள். இருந்தாலும் பென் குரியன் அவனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்து விசாரணை செய்து உலகத்திற்கு யூதர்கள் மீது நடந்த கொடூரங்களை உணரச் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

தலைவரின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு அவனைக் கொல்லாமல் அவனுக்கு உபச்சாரம் செய்ய வேண்டி வருகிறது. அனைத்து ஏஜெண்டுகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் எந்த நேரத்திலும் அர்ஜெண்டைனா போலீஸிடம் மாட்டிக் கொள்ள நேரும் இக்கட்டான நிலையிலும் தத்தளிக்கிறார்கள். அர்ஜெண்டினாவின் முக்கியமான அதிகாரிகள் நாசி ஜெர்மானியர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதிலும் கடத்தப் பட்ட ஐக்மேனைத் தேடி மீட்பதிலும் குறியாக இருக்கிறார்கள். இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து மிகுந்த நுட்பமான தகவல்களுடன் ஒரு நாவலாகப் பதிக்கிறார் இந்த ஆப்பரேஷனைத் தலைமையேற்று நடத்திய மொசாட் தலைவர்களில் ஒருவரான ஐஷர் ஹரல். அவர் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் மார்டின் பால்சாம் என்ற நடிகரும் ஏஜெண்ட் மைக்கேலாக நடிக்கும் டோபோல் என்ற நடிகரும் மிக உணர்ச்சிபூர்வமாக அந்தப் பாத்திரமாகவே மாறியுள்ளார்கள். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய நடிகர்களுக்கும் ஹோலோகாஸ்டின் முழு விபரீதமும் கொடுமையும் முழுமையாக உணர்ந்தவர்களாதினால் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்கள்.

மொசாட் அனுப்பும் ஏஜெண்ட் மைக்கேலின் வசனங்கள் கூர்மையானவை. டோபோல் என்ற நடிகர் பிரமாதமாக அதைச் செய்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விட்டது. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ரோஜர் மூருக்கு உதவி செய்பவராக வருவார். எளிதில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சிகரமான முகம். மைக்கேலின் உதவி ஏஜெண்ட் தனக்கு இந்த ஆப்பரேஷனில் உடன்பாடு இல்லை என்றும் நம்மால் வரலாற்றைத் திருப்ப முடியாது என்றும் பழசை மறந்து விட்டு நாம் வாழ வேண்டும் என்றும் கோழையாக மனம் தளர்ந்து தன்னை விட்டு விடுமாறு கோருகிறான். மைக்கேல் அவனுக்கு இந்த ஐக்மேனை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் தண்டிக்க வேண்டும் ஏன் நாம் வரலாற்று சோகத்தை மறக்கக் கூடாது என்பதை விளக்குகிறார்.

அந்த மொசாட் ஏஜெண்ட் மைக்கேல் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைதையையும் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மக்களும் எழுதி வைத்து மனனம் செய்ய வேண்டிய வரிகள். அந்த உணர்வு இஸ்ரேலில் பென் குரியனிடமிருந்து, கோல்டா மெயரிடமிருந்து கடைசி கட்ட குடிமகன் வரை நிலவுவதால்தான் அந்தச் சிறிய நாடு இன்று நிமிர்ந்து நிற்க முடிகிறது. மிகப் பெரிய மக்கள் தொகையும் பரந்து விரிந்த நிலப்பரப்பும் இருந்தும் சுயமரியாதை இழந்து நிற்கும் இந்தியாவை இன்று சிறிய பங்களாதேசம் கூட மதிக்காததில் அதிசயம் இல்லை.

இந்தியா கடந்த 1300 வருடங்களாக காட்டுமிராண்டிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது. இஸ்லாமியப் படையெடுப்புக்களினாலும் ஐரோப்பிய ஆதிக்க வெறி நாடுகளின் படையெடுப்புக்களினாலும் தந்திரமான நுழைவுகளினாலும் இந்தியா தொடர்ந்து கடுமையாக பாதிக்கப் பட்டு வந்திருக்கிறது, துண்டாடப் பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்வமும் கலாச்சாரமும் கலை வளங்களும் தொடர்ந்து சூறையாடப் பட்டுக் கொள்ளை போயிருக்கிறது.

கொடூரமான பஞ்ச காலங்களிலும் கூட இந்திய மக்கள் உணவின்றி பஞ்சத்தில் கொத்துக் கொத்தாக இறந்த பொழுதும் பிரிட்டன் தன் படைகளுக்கும் மக்களுக்கும் இந்தியாவின் தானியங்களைக் கொள்ளையடித்துக் கடத்திச் சென்று கொழுத்திருக்கிறது, இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கும் செல்வ நிலைக்கும் அடித்தளமே இந்தியாவில் இருந்து அடிக்கப் பட்டக் கொள்ளைகளும் சுரண்டல்களுமே ஆதாரமாக விளங்குகின்றது.

இது வரலாறு.

அந்த வரலாற்றை நாம் ஒழுங்காக நினைவு படுத்திக் கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை. போலி மதச்சார்பின்மைவாதிகளினாலும் பொய்யான மழுங்கடிக்கப் பட்ட வரலாறே நமக்குப் பள்ளி கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. நாம் கொள்ளையடிக்கப் பட்ட சூறையாடப் பட்ட வரலாறு நமக்கு போதிக்கப் படவில்லை. நம் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும், வரலாற்று அறிஞர்களும், பல்கலைக் கழகங்களும், சினிமாக்களும், நாவல்களும், இலக்கியமும், கலையும்,அருங்காட்சியகங்களும் இந்தியாவின் மீதான 1300 ஆண்டுகளுக்கும் மேலான தாக்குதல்களை போதிய அளவில் நமக்குச் சொல்லவேயில்லை. உரிய விதத்தில் பதியவில்லை.

ஆகவே வரலாற்று கொடுமைகளை மறந்து போன இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே எந்தவிதமான பொது வரலாற்று அறிவும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையே இழைத்து வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல்களைப் புரிந்து கொள்ளாத தவறினாலேயே ஒரு இத்தாலிய பெண்மணியிடம் இந்தியாவின் ஆளும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை. அவுரங்கசீப் பற்றிய கண்காட்சியைக் கூட நம்மால் நடத்த முடிவதில்லை. சென்னையில் அவுரங்க சீப் பற்றிய ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த முயன்ற கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் (குறிப்பாக ராதா ராஜன் என்ற சமூக சேவகர்) போலீசாராலும் ஆர்காட்டு நவாப்பாலும் மிரட்டப் பட்டு அந்தக் கண்காட்சியை நடத்த விடாமல் தடுக்கப் பட்டனர்.

அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

இந்தோ சீனி பாய் பாய் என்ற முட்டாள்தனத்தின் விளைவாக சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவின் பகுதிகளை இழக்க நேர்ந்த வரலாற்றை நாம் அறியாமல் போனால் எதிர்காலத்தில் அதே தாக்குதலை சீனா இந்தியா மீது நிகழ்த்தும். ஆனால் நமது கம்யுனிஸ்டுகளும், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் அந்த வரலாற்றை நம்மிடமிருந்து மறைக்கவும் சீனாவுக்குத் துதிபாடவும் செய்கிறார்கள். அவர்களை நம்பி நம் வரலாற்றை நம் மக்கள் அறியாமல் போனால் மீண்டும் மீண்டும் அழியப் போவது இந்தியாவும் அதன் மக்களுமே. இஸ்ரேலிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் எவ்வளவோ உள்ளன. இந்த சினிமாவும் அவற்றில் ஒன்று. வரலாற்றை அறியாதவன் வரலாற்றுத் தவறுகளினாலேயே அழிக்கப் படுவான்.

அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

ஆகவே வரலாற்றின் மாபெரும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம் அதற்கான விலையை மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறோம் இருந்தும் இன்று வரை நமக்கு புத்தி வரவில்லை. இது யார் கொடுத்த சாபம்? ஏனிந்த இழி நிலை இந்தியர்களுக்கு?

சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!

–நிறைவடைந்தது.

–நன்றி தமிழ் ஹிந்து

1- கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – - விஸ்வாமித்ரா

தன் மக்களை பயங்கரவாதத்தால், அச்சுறுத்தலால், மத – இனவெறியால் கொன்றவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து விசாரித்துத் தண்டனை வழங்குவதோ அல்லது கைது செய்ய முடியாத பட்சத்தில் அவர்களைக் கொன்று இனியும் அது போன்ற பயங்கரவாதச் செயல்களை நடவாதவாறு உறுதி செய்வதோ மட்டுமே எந்தவொரு மக்கள் நலனிலும் நாட்டு நலனிலும் அக்கறையுள்ள ஒரு அரசு செய்யக் கூடிய முறையான துணிவான செயலாக இருக்கும்.

முதுகெலும்பு உள்ள எந்தவொரு தலைவனும் அதைத்தான் செய்வான். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான பின்லாடனை பாக்கிஸ்தானுக்குள் புகுந்து கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கை இத்தகைய துணிவான நடவடிக்கைக்கான சமீபகால உதாரணம்.

ஆனால் இந்தியாவிலோ நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை விட, மக்களின் உயிரை விட, தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப் பட்ட உயிர்களுக்கான நியாயத்தை விட, இந்த சோனியா காந்தி + மன்மோகன் சிங் அண்ட் கோ அரசுக்கு அவர்களது ஓட்டு மட்டுமே குறியாகிப் போன கேவலமான நிலையில், இன்று இந்தியாவில் நீதி கேலிக்குரியதாக்கப் பட்டு விட்டது. நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சி வரை இந்த அவல நிலைத் தொடர்ந்து வருகிறது. நமது நாட்டிற்கு உள்ள எதிரிகளைக் கண்டு பிடித்து அழிக்கக் கூடிய, உலக அரங்கில் அவர்களின் கொடுமைகளை நிரூபித்து நியாயம் வழங்க முடியாத, விரும்பாத ஆட்சிகளே இந்தியாவுக்குத் தொடர்ந்து அமைவது இந்தியாவின் மீதான ஏதாவது ஒரு சாபமாக, சாபக்கேடாக மட்டுமே இருக்க முடியும்.

இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த பயங்கரவாதிகளை என்ன செய்தது?

நினைவூட்டுதலாக சில செய்திகள்:

அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.
தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.
டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.

இப்படி எத்தனையோ உதாரணங்களை நாம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது விரக்தியையும் வெறுப்பையும் அவமானத்தையுமே இந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துபவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத, இந்தியாவையும் அதன் மக்களையும் அன்றாடம் கொன்று தீர்க்கும் மிருகங்களைக் கண்டு பிடிக்க முடியாத, அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்களை விசாரித்து உரிய தண்டனை கொடுக்க பலம் இல்லாத கோழையான அரசாங்கங்களையே இந்தியா தொடர்ந்து பெற்று வருகிறது.

சுயமரியாதையும், சுய பாதுகாப்பு உணர்வும் ஒற்றுமையும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகில் வாழ அருகதையில்லாத எளிதில் அழிக்கப் படக் கூடிய, உலகில் மரியாதை பெறாத முதுகெலும்பில்லாத ஒரு கேவலமான சமூகமாகி விடும். அப்படிப் பட்ட கேவலமான ஒரு இடத்தில் தான் இந்தியா இன்று இருக்கிறது பெரும் மன வலியை ஏற்படுத்தும் ஒரு உண்மை. சீனா முதல் பங்களாதேஷ், இலங்கை வரை இந்தியாவை ஒரு முதுகெலும்பில்லாத காமெடிப் பீசாக மட்டுமே உலக நாடுகள் கருதுகின்றன. அதன் காரணம் நம் வரலாற்றை உணர்ந்து நம் வலிமையை உறுதி செய்யாத பலவீனமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் பலவீனமான மக்களுமே.

இந்தியாவின் நடத்தைக்கு நேர்மாறான முதுகெலும்புள்ள ஒரு தேசம் இஸ்ரேல். தன் நாட்டின் ஒலிம்பிக் வீரர்களை 1972ஆம் ஆண்டு ம்யூனிக் நகரத்தில் கொன்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றது இஸ்ரேலின் உளவுப் படை. தன் மக்களின் உயிர்களுக்கு மரியாதை செலுத்தத் தெரிந்த ஒரு அரசாங்கம் அது. தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல்.

தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் (The House on Garibaldi Street) என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. மொசாட் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான இஷர் ஹரல் என்பவர் ஐக்மேன் என்கிற நாஜி கொடுங்கோலனை, அவன் அர்ஜென்டினாவில் ஒளிந்து வசித்து வரும் இடத்தில் இருந்து கண்டுபிடித்து இஸ்ரேலுக்குக் கடத்தி வந்து இஸ்ரேலிய நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பவங்களை இதே பெயரில் ஒரு நாவலாக எழுதியுள்ளார். அந்த நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். ம்யூனிக் சினிமா பற்றி ஏற்கனவே தமிழ்ஹிந்துவில் எழுதியிருக்கிறேன். அந்த சினிமா போலவே இந்த கரிபால்டி தெரு வீடு சினிமாவும் ஒவ்வொரு இந்தியராலும் அவசியம் பார்க்கப் பட வேண்டிய முக்கியமானதொரு சினிமா.

ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள் – விச்வாமித்ராவின் விமர்சனம்
படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…

யூதர்களுக்கு எதிராக நடந்த முக்கியமான படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த ஹிட்லரின் பல அடியாட்கள் உலகப் போருக்குப் பின்னால் கத்தோலிக்கச் சபைகளின் தயவால் அவர்கள் ஆதிக்கம் நிலவும் தென்னமரிக்க நாடுகளுக்குக் கடத்தப் பட்டு அங்கு பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டனர். ஹிட்லரின் மறைவுக்குப் பிறகும் அவனது அட்டூழியங்களுக்கு உறுதுணையாக இருந்தன கத்தோலிக்க தலைமையும் அதன் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும். கேஸ் சேம்பர்களை அமைப்பதிலும் படுகொலைகளை நடத்துவதிலும் முக்கியமான பங்கெடுத்த அடால்ஃப் ஐக்மான் என்ற ஜெர்மனி நாசியை கத்தோலிக்க உதவியுடன் பத்திரமாக நாடு கடத்தி தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டைனாவில் உள்ள ப்யூனஸ் ஐயர்ஸ் நகரத்தில் அவனது பெயரை மாற்றி பாதுகாத்து வருகிறார்கள்.

சான் ஃபெர்டினாண்டோ என்ற புற நகர்ப் பகுதியில் அமைந்த கரிபால்டி தெருவில் அவன் பாதுகாக்கப் பட்டு வருகிறான் என்ற ரகசிய செய்தி 1959ம் வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் ஜெர்மனியினாலேயே இஸ்ரேலின் உளவுப் பிரிவுக்கு கசிய விடப் படுகிறது. ஆரம்பத்தில் இந்தச் செய்தியை இஸ்ரேல் நம்பாவிட்டாலும் எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று முடிவு செய்கிறார்கள். இஸ்ரேலின் பிரதமர் பென் குரியன் நேரடியாகத் தலையிட்டு எப்பாடு பட்டேனும் இந்த ஐக்மேனை உயிரோடு இஸ்ரேலுக்குக் கடத்திக் கொண்டு வந்து விசாரிக்கப் பட்டுத் தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

அர்ஜெண்டினாவின் பாதுகாப்பில் இருப்பவன் உண்மையிலேயே பல லட்சம் யூதர்களை காஸ் சேம்பர்களில் இட்டுக் கொடூரமாகக் கொன்ற அதே அடால்ஃப் ஐக்மான் தானே என்ற சந்தேகத்தை உறுதி செய்வதற்காகவும் அவன் தான் அந்த நபர் என்றால் அவனைக் கடத்திக் கொண்டு வருவதற்காகவும் மொசாட்டில் ஒரு சிறு குழு அமைக்கப் படுகிறது.

இஸ்ரேல் அர்ஜெண்டினாவிடம் அவனை நாடு கடத்துமாறு நேரடியாகக் கோர முடியாது. அப்படிக் கோரினால் கத்தோலிக்க நாடான அர்ஜெண்டைனா அப்படி ஒரு ஆளே அங்கு இல்லை என்று எளிதாக மறுத்து விடும். இந்தியா இப்பொழுது தாவூத் இப்ராஹிமை ஒப்புவிக்கச் சொல்லி பாக்கிஸ்தானிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பது போல, அபு சலீமை நாடு கடத்தக் கோரி போர்ச்சுக்கல் கோர்ட்டுக்களில் கெஞ்சிக் கொண்டிருந்தது போல மிக எளிதாக புதிய சிறிய நாடான இஸ்ரேலை ஏமாற்றி விடுவார்கள்.

அப்படி முறையாக கோரிக்கை வைப்பதில் எந்தவித பயனுமில்லை என்பதை நன்கு உணர்ந்த இஸ்ரேலியப் பிரதமர் அந்த வழியில் செல்லக் கூட முயற்சிப்பதில்லை. தனது திறமையான உளவுப் படையின் தலைவரிடம் மட்டுமே அவனை உயிருடன் பிடித்து வரும் பணியை ஒப்படைக்கிறார். அப்படிப் போய்க் கெஞ்சுவதற்கும் ஏமாறுவதற்கு இஸ்ரேல் ஒன்றும் முதுகெலும்பில்லாத இந்தியா அல்ல பென் குரியனும் மண்புழு மன்மோகன் சிங் அல்ல. அவர்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள். மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடாது என்ற உண்மையை உணர்ந்த இஸ்ரேல் தனது ஒற்றர்கள் படை ஒன்றை அர்ஜெண்டினாவுக்கு அனுப்பி வைக்கிறது. மொசாட் குழுவினர் வர்த்தகர்கள் என்ற போர்வையில் ப்யூனஸ் ஐயர்ஸ் செல்கிறார்கள்.

தங்கள் முறைப்படி மிகத் தந்திரமாக துப்பறிந்து ஐக்மானின் வீட்டைக் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் க்ளெமெண்ட் ரிக்கார்டோ என்ற பெயரில் வாழும் ஐக்மான் இடம் மாறி கரிபால்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப் பட்டிருக்கிறான். ரகசியமாக உள்ள அவனது புது விலாசத்தை மிகத் திறமையாகத் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள். கண்டு பிடித்து அது அவன் தான் என்பதை உறுதி செய்கிறார்கள். அதன் படி அடுத்தக் கட்ட நடவடிக்கைத் தொடங்குகிறது.

அர்ஜெண்டினா நாட்டின் 150வது சுதந்திர தினத்தில் பங்கு கொள்ள இஸ்ரேலியக் குழுவை அனுப்புமாறு தற்செயலாக பென் குரியனுக்கு வரும் ஒரு கடிதத்தைப் பயன் படுத்திக் கொண்டு இன்னொரு குழுவை இஸ்ரேல் விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள். திட்டமிட்டபடி ஐக்மேன் கடத்தப் பட்டு ஆள்மாறாட்டம் செய்யப் பட்டு அந்த விமானம் மூலமாக பல அதிரடி சாகசங்களைச் செய்து அர்ஜெண்டினா போலீஸிடம் இருந்து தப்பி இஸ்ரேல் கொணர்ந்து சேர்க்கிறார்கள் அதன் பின் அவன் விசாரிக்கப் பட்டு 1962ம் வருடம் மரண தண்டனை அளிக்கப் படுகிறது. இவை அனைத்தும் 1959-62 வரை நடந்த உண்மைச் சம்பவங்களே. மிகத் தத்ரூபமாக நாவலின் அடிப்படையில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சி…

–நன்றி தமிழ் ஹிந்து

சுஜாதா பற்றி சுப்பையா…

SP.VR.Subbaiya

குமுதம்‘ மூலமாக ஓவியர் ஜெயராஜ் அவர்களின் தொடர்பு கிடைத்தது போலவே, அதே குமுதம் மூலமாக எனக்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களுடைய தொடர்பும் கிடைத்தது.

அது நான் செய்த பாக்கியம்!

அவரை பற்றி குறைந்தது பத்து பக்கங்களாவது எழுதிப் பதிவு போடலாம் என்று இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்தேன்.

வலையுலகிற்கு வந்தவுடன் அதைச் செய்திருக்க வேண்டும்!

”இந்த பஸ்ஸில் தலை தெறிக்கும் கூட்டம், அடுத்த பஸ்ஸில் போகலாம்” என்று காத்திருந்தவன் நிலைமை ஆகிவிட்டது.

ஏன் அதை அப்போதே செய்யவில்லை?

என்றைக்காவது தமிழ் மணத்தின் ஸ்டார் பதிவு சான்ஸ் கிடைக்கும். வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிடுவார்கள்.அப்போது எழுதுவோம் என்றிருந்தேன்.

அவர் ஒரு நட்சத்திரம் – நட்சத்திரப்பதிவில் எழுதுவதுதான் சரியானது என்றும் இருந்தேன்

அதுதான் கோளாறாகப் போய்விட்டது!

தமிழ்மணம் எனக்கு வாய்ப்புத் தருவதற்குள் சுஜாதா அவர்கள் எம்பெருமான் நாராயணனின் திருவடியைக் காணச்சென்று விட்டார்.

அவருடைய அபிமானிகள் என் ஆட்டத்திற்கு வேலையில்லாமல் செய்து விட்டார்கள்,

அவரைப் பற்றிச் சுவையாகச் சொல்ல இருந்ததையெல்லாம் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு எனக்குக் காலிப் பாத்திரத்தை மட்டும் வைத்து விட்டார்கள்.

அவரைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரே ஒரு செய்தியை மட்டுமே சொல்லும் நிலையில் நான் உள்ளேன். அதை மட்டும் அறியத் தருகிறேன்

புது தில்லி டிஃபென்ஸ் காலனியில் அவர் இருந்த காலத்தில், அவருடன் எனக்குத் தொடர்பு கிடைத்தது. அது நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தது.

பின் ஒரு நாள் கோவை வந்திருந்த அவர், அழைப்பு விட, அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அவரைச் சென்று பார்த்தேன்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரோடு சிலாகித்துப் பேசினேன்.

அந்த சந்திப்பின் நினைவாக, அவர் தான் எழுதிய நூல் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்.

அவர் எழுதிய சிறுகதைகளை வார இதழ்களில் இருந்து கழற்றி தொகுப்பாக வைத்திருந்தேன். அந்தத் தொகுப்பையும் கையில் கொண்டு போயிருந்தேன்.

வாங்கிப் பார்த்த அவர், ஒரு கதையைப் பார்த்து விட்டு அகம் மகிழ்ந்தார்

”ஆரம்ப காலத்தில் குமுதத்தில் நான் எழுதிய கதை. இதன் பிரதி என்னிடம் கூட இல்லை. உங்களிடம் இருக்கிறதே. பத்திரமாக வையுங்கள். தேவைப்பட்டால் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.

அதன் Scanned Copy யைக் கீழே கொடுத்துள்ளேன்.
——————————————————————————

சுஜாதா வியந்து பாராட்டித் தன்னிடம் கூடப் பிரதி இல்லையென்று சொன்ன அந்தச் சிறுகதை

தொடர்புடைய பதிவு:

எழுத்தாளர் சுஜாதா — SP.VR. SUBBAIYA

ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை!

வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமை உள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ச்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி கல்கி 

நான் விரும்பிய மிகச் சிறிய கதை – சுஜாதா

பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.

நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.
அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். “நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் ஒரு ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது. அது மிஸ் —-உடன் ஒரு இரவாவது இன்பமாகக் கழிப்பது. அதற்கேற்ற செல்வம் நம் ஒருவரிடமும் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபிராங்க் போட்டு ஒரு நிதி திரட்டுவோம். போட்டவர்கள் பேரை எல்லாம் சீட்டுகளில் எழுதிக் குலுக்கி ஒரு சீட்டு தேர்ந்தெடுப்போம். எவன் பெயர் வருகிறதோ அவன் மற்றவர்களின் பிரதி நிதியாக, திரண்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்று வரட்டும். வந்து தன் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லட்டும்.”
இதற்கு அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள, மிகப் பெரிய வசூல் நிதி சேர்ந்தது. எல்லோர் பெயரும் சீட்டுக்களில் எழுதப்பட்டு ஒரு பெரிய ட்ரம்மில் குலுக்கப்பட்டு, ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டம் அடித்தது ஒரு சாதாரண சோல்ஜருக்கு. அவன் அளவிலா ஆனந்தம் அடைந்து சுத்தமாகத் தலை வாரிக் கொண்டு ஷூஸ் பாலிஷ் போட்டுக் கொண்டு தன் மிகச் சிறந்த ஷர்ட் அணிந்து கொண்டு சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களின் பொறாமைப் பெருமூச்சுகள் தொடர அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.
அந்த மிக அழகான பெண்ணுடன் அவன் அந்த மாலை நிஜமான கனவில் மிதந்தான். அவள் சிநேகிதமும், அவள் மென்மையும் அவள் வடிவமும் அவள் உடம்பின் சில்க்கும் அவள் வாசனையும் அவள் இன்பமான பேச்சும் பேச்சுக்குப் பின் மூச்சும்….
கடைசியில் அவளிடமிருந்து விடைபெறுகையில் அந்தப் பெண் அவனை “நீ யார்?” என்று கேட்டாள்.
“ஏன் கேட்கிறாய்?” என்றான்.
என்னைப் பிரபுக்களும் அரச குமாரர்களும்தான் பார்க்க வருவார்கள். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை” என்றாள்.
அவன் “நான் ஒரு சாதாரண சோல்ஜர்” என்றான்.
“அப்படியா! உனக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது?  எங்கேயாவது…”
“இல்லை இல்லை” என்று அந்த இளைஞன் தன் காம்ப்பில் நடந்ததை முழுவதும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்ட அவள் ஆச்சரியப்பட்டாள். “என்னை நினைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உருகுகிறார்களா? என்னிடம் இவ்வளவு பேர் ஆசை வைத்திருக்கிறார்களா? உன் கதை என் நெஞ்சைத் தொடுகிறது… அதற்காக நான் உனக்கு ஒரு பரிசு அளிக்கப் போகிறேன்… மறக்க முடியாத பரிசு… உலகத்திலேயே மிக விலை உயர்ந்த பெண்ணுடன் நீ ஒரு இரவை முழுக்க முழுக்க இலவசமாகவே கழித்தாய் என்று இருக்கட்டும். எனக்கு உன் பணம் வேண்டாம்….”
இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித் தந்து விட்டாள்!
Follow

Get every new post delivered to your Inbox.

Join 79 other followers